Sunday 18 December 2011

கூடங்குளம் பிரச்னை முற்றுகிறது : மக்களை மதிக்காமல் வன்முறையை தூண்டும் ஜனநாயக அரசு

எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை? 
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்குவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய தொழில் நுட்ப உதவியுடன் ரூ 13 ஆயிரத்து 615 கோடி முதலீட்டில் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடங்குளம் அணு உலை இந்த மாதம் உற்பத்தியை தொடங்க இருந்தது. ஆனால் அணு மின்நிலையத்தை எதிர்த்து கடந்த 3 மாதங்களாக அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன்சிங் அளித்த பேட்டியில் விரைவில் முதல் அணு உலை 2 வாரத்தில் செயல்படத் தொடங்கும் என்று அறிவித்தார். ஆனால் அணு உலை எதிர்ப்பாளர்களோ, ஜனவரி முதல் வாரத்தில் இருந்து போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக வும், அணு மின் நிலையத் தில் உள்ள யுரேனியத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர். இதனால் பதட்டமானநிலை சூழ்நிலை அங்கு நிலவுகிறது.
மத்திய அமைச்சர் நாராயணசாமி, 
‘கடந்த 15ம் தேதி மத்திய நிபுணர் குழுவினர் போராட்டக்காரர்களை சந்தித்து பேசினர். போராட்டக் குழுவினர் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை கேட்காமல், கூடங்குளம் அணுமின் நிலைய வரைபடங்கள், ரஷ்யாவுடன் செய்த ஒப்பந்த நகல்கள், செலவினத் தொகை பற்றிய முழு விவரங்களை கேட்டுள்ளனர். அவை நமது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அவற்றை பகிரங்கமாக அறிவிக்க முடியாது. இவர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அனுமின் நிலைய செயல்பாடை இழுத்தடிக்க முயல்கின்றனர். இதை மத்திய அரசு அனுமதிக்காது.
போராட்டகாரர்கள் மீது போலீசார் இதுவரை சுமார் 160 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே தமிழக அரசு, போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
‘போராட்டக் காரர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது. தன்னார்வ அமைப்புகள் பொய் பிரச்சாரம் மூலம் அவர்களை தூண்டி விடுகிறார்கள். திருநெல்வேலி போலீசார் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை’ என்றார்.
மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு, கூடங்குளம் விவகாரம் குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். 
கூட்டத்தில், கூடங்குளம் விவகாரத்தில், ஏற்பட்டுள்ள சட்டம் & ஒழுங்கு பிரச்னையை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் மத்திய அரசின் உத்தரவுப்படி எப்படி போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரதமருக்கு ஜெயலலிதா கோரிக்கை : அவசரம் வேண்டாம்
கூடங் குளம் பிரச்னையில் மக்களின் அச்சத்தை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ரஷ்ய அதிபருடன் சேர்ந்து அளித்த பேட்டியின்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சில வாரங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்று நீங்கள் கூறியுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. உள்ளூர் மக்களின் அச்சம் நீங்கும் வரை, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறேன்.
தமிழக நிதியமைச்சர் தலைமையிலான குழுவினர் உங்களிடம் இது தொடர்பாக நேரில் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து உள்ளூர் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அவர்களுடன் கலந்துரையாடுவதற்காக மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. சந்திப்புக்கான ஏற்பாடுகளை உள்ளூர் அதிகாரிகள் மூலம் தமிழக அரசு செய்து கொடுத்தது. கூடங்குளம் பகுதியில் வசிக்கும் மக்களின் திருப்தி, என்னுடைய அரசுக்கும், தமிழகத்துக்கும் மிக முக்கியம்.
இதனால், மக்களின் அச்சத்தை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது வரை எவ்வித அவசர நடவடிக்கையும் கூடாது.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
மக்களை கொன்று வல்லரசு ஆகா வேண்டுமா இந்தியா???
சிறு தொழில் செய்பவர்களுக்கு மின்சாரம் பற்றகுரையாம்??? தமிழ் நாட்டில் தயாரிக்க படும் மின்சாரம் எங்கு செல்கிறது???
போராடும் மக்களின் கண்ணீருக்கும் பட்டினிக்கும் ஜனநாயக நாட்டில் பதில் இல்லை... வன்முறை வழக்கு தான்????
ஜனநாயகத்தை தூக்கிலிட்டு இந்தியா வல்லரசு ஆகா வேண்டுமா???

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் செல்போன் சார்ஜ் ஏற்றலாம் : கல்லூரி ஊழியர் கண்டுபிடிப்பு

சோலார் மொபைல் சார்ஜர்
திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஜெயவீரபாண்டியன். இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிகிறார். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சோலார் மொபைல் சார்ஜர் கருவியை உருவாக்கியுள்ளார். சிறிய அளவிலான பிளாஸ்டிக் டப்பாவின் மேல்புறம் சோலார் பேனல் பதிக்கப்பட்டு, அதன் தொடர்பில் மொபைல் பேட்டரி, கன்டன்சர் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியில் இந்த பேனலை வைக்கும் போது ஆற்றல் மின்னாற்ற�லாக மாற்றப்பட்டு பேட்டரியில் பதிவாகிறது. இதில் இருந்து உரிய பிளக் மூலம் செல்போனை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
வெளிச்சத்தின் மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வகையிலும் தனியாக சார்ஜரை வடிவமைத்துள்ளார். இந்த சார்ஜரை சூரிய ஒளியில் நேரடியாக வைக்க வேண்டியதில்லை. வீடு, கார், பஸ் உள்ளிட்ட எந்த இடத்திலும், இந்த சார்ஜரை பாக்கெட்டில் வைத்துக் கொண்டால்கூட, சோலார் பேனில் படும் சிறிய வெளிச்சத்தின் மூலம் சார்ஜ் ஏறி விடுகிறது. மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால் போதும், அந்த வெளிச்சத்தில் சார்ஜ் ஏறும் என்கிறார்.