Saturday 7 January 2012

2 எஸ்.ஐ. 2 போலீசார் கைது 3 போலீசார் தப்பி ஓட்டம் : மதுரை ஓட்டலில் சூதாட்டம்

மதுரையில் ஓட்டலில் பணம் வைத்து சூதாடிய 2 சப் இன்ஸ்பெக்டர்கள், 2 போலீசார் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 போலீசார் தப்பிச் சென்றனர்.
மதுரை ரிங் ரோட்டில் உத்தங்குடி சந்திப்பு அருகே உள்ள ஒரு ஓட்டலில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக எஸ்பி அஸ்ரா கர்க்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சின்னப்பாண்டி தலைமையில், செக்காணூரணி இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ உள்பட பலர் இடம் பெற்ற தனிப்படையினர் நேற்று நள்ளிரவில் குறிப்பிட்ட ஓட்டலில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் ஒரு அறையில் 12 பேர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். 9 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரித்தபோது சிக்கியவர்களில் பலரும் போலீசார் என தெரியவந்தது. இதனால் ரெய்டுக்கு சென்ற போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
மதுரை மீனாட்சி கோயில் ஸ்டேஷன் எஸ்.ஐ. கூத்தபெருமாள்(57), திலகர் திடல் ஸ்டேஷன் எஸ்.ஐ. கருப்பையா(53), திலகர் திடல் போக்குவரத்து பிரிவு ஏட்டு பாலசுப்பிரமணியன்(42), எஸ்எஸ் காலனி ஸ்டேஷன் போலீஸ்காரர் பாலமுருகன்(46), லாட்ஜ் உரிமையாளர் வேலு(51), ஜேம்ஸ்(42), ராஜேந்திரன்(38), தர்மர்(50), வீரையா(47) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை நகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்பள கணக்கு பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் தனுஷ், திலகர் திடல் ஸ்டேஷனில் பணியாற்றும் அசோக், திடீர் நகர் ஸ்டேஷனில் பணியாற்றும் ரவி ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
கைதான 9 பேரும் மேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். சூதாட்ட வழக்கில் போலீசாரே சிக்கியுள்ளதும், ஒரே நேரத்தில் 7 போலீசார் சிக்கியதும் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளித்தலை : நள்ளிரவில் லஞ்சம்: தாசில்தார் கைது

மணல் குவாரிக்கு தடையில்லா சான்று வழங்க நள்ளிரவில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குளித்தலை தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் மோகன். மணல் குவாரி நடத்தி வருகிறார். இவரது மணல் குவாரியின் உரிமத்தை புதுப்பிப்பதற்காக கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதில் சம்பந்தப்பட்ட குவாரியை ஆய்வு செய்து, தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குளித்தலை தாசில்தார் அலுவலகத்திற்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை அனுப்பப்பட்டது.
ஆனால் நீண்ட நாள் ஆகியும் மோகனுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து மோகன் நேற்று காலை குளித்தலை தாசில்தார் நேருவை நேரில் சந்தித்து தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு கேட்டார். இதற்கு தாசில்தார் நேரு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
இது குறித்து மோகன் திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி நேற்றிரவு குளித்தலையில் உள்ள அரசு அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்கும் தாசில்தார் நேருவின் வீட்டுக்கு மோகன் சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் தாசில்தார் நேரு, மோகனிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை வாங்கினார்.
அப்போது, லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி அம்பிகாபதி மற்றும் போலீசார் நேருவை கையும் களவுமாக கைது செய்தனர். அதன்பின் அவரது வீட்டிலும் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.

ஆசனவாயில் மறைத்து 1400 கிராம் தங்க பிஸ்கட்டுகள் கடத்தல் : அயன் படமா??

கொச்சி விமானநிலையத்தில் 1400 கிராம் எடையுள்ள 14 தங்க பிஸ்கட்டுகளை ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்த இலங்கை ஆசாமியை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கொழும்பிலிருந்து நேற்று கொச்சி வந்த ஸ்ரீலங்கா ஏர்வேஸ் விமானத்தில் ஒருவர் தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வருவதாக கொச்சி வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானம் கொச்சியில் தரை இறங்குவதற்கு முன்பே விமானநிலையத்தை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.
விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். ஆனால் அவரிடம் தங்க பிஸ்கட்டுகள் எதுவும் சிக்கவில்லை. சோதனைக்கு அந்த நபர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒத்துழைத்தார். பல மணிநேரம் சோதனை நடத்தியும் அந்த நபரிடமிருந்து எந்த கடத்தல் பொருளும் சிக்கவில்லை.
ஆனால் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு மிகவும் நம்பகமான இடத்திலிருந்து தகவல் கிடைத்திருந்ததால் அந்த வாலிபரை கூடுதல் பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டுசென்றனர்.
மருத்துவமனையில் எக்ஸ்ரே பரிசோதனை நடத்தியபோது அந்த வாலிபரின் ஆசனவாயில் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை மருத்துவர்களின் உதவியுடன் வெளியே எடுத்தபோது மொத்தம் 14 தங்க பிஸ்கட்டுகள் இருந்தன. ஒவ்வொன்றும் தலா 100 கிராம் எடை கொண்டதாகும். மொத்த எடை 1400 கிராம்.
இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்த ஆசாமியின் பெயர் அல்தாப் சாகுல் அமீது (47). கேரளாவிலிருந்து கிராம்பு, ஏலக்காய் உட்பட நறுமணப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு செல்லும் இவர், அங்கிருந்து தங்க பிஸ்கட்டுகளை இந்தியாவுக்கு கடத்துவது வழக்கம்.
இதுவரை 13 முறை இவர் தங்க பிஸ்கட்டுகளை கடத்தியுள்ளார். விசாரணையில் சென்னையைச் சேர்ந்த ஒரு முக்கிய கடத்தல் புள்ளிக்காகவே தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வருவதாகவும், ஒரு முறைக்கு விமான டிக்கெட் போக 10,000 ரூபாய் தனக்கு கிடைக்கும் என்று அல்தாப் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அல்தாப்பை தீவிர விசாரணைக்குப் பின் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
சென்னையை சேர்ந்த முக்கிய கடத்தல் புள்ளிக்கும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.

பட்டாசு மேளம் அடிக்கும் விவசாயிகள் : நெற்பயிர்களை நாசமாக்கும் படர் குருவிகளை விரட்ட

குமரி மாவட்டத்தில் தற்போது கன்னிப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. சுமார் 12 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிர்களில் பால் வடியும் பருவம் ஆகும். இந்த சமயங்களில் படர்குருவிகள் மொத்தமாக வந்து பயிர்களில் உள்ள பால்களை உறிஞ்சி சென்று விடும். இப்படி உறிஞ்சி சென்று விட்டால் அந்த பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் கருகி விடும். இதையடுத்து படர் குருவிகள் வருவதை தடுக்க, விவசாயிகள் சில நூதன வழிகளை கையாள்வது வழக்கம்.


இதே போல் வடசேரியில் உள்ள வயல்களில் தற்போது நெற்பயிர்கள் பால் வடியும் பருவத்தில் உள்ளன. இதனால் படர் குருவிகள் மொத்தமாக வருவதை தடுக்க, விவசாயிகள் அதிகாலையிலேயே பட்டாசுகள் கொளுத்தி யும், மேளம் அடித்தும் விரட்டுகிறார்கள். ஒரு வயலில் இருக்கும்போது பட்டாசு கொளுத்தினால் அடுத்த வயலுக்கு குருவிகள் சென்று விடும். இதனால் தொடர்ந்து பட்டாசு கொளுத்த வேண்டும். இதே போல் டப்பாவை கழுத்தில் கட்டிக்கொண்டு மேளம் போல் தொடர்ந்து அடித்து கொண்டே வயல்களில் செல்கிறார்கள்.
இது குறித்து வடசேரியை சேர்ந்த விவசாயிகள் செல்வராஜ், ஐயப்பன் ஆகியோர் கூறும்போது, படர் குருவிகள் மொத்தமாக, மொத்தமாக வந்து வயலில் இறங்கும். ஒரே சமயத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குருவிகள் வருவது உண்டு. இவைகள் நெற்பயிர்களில் இருக்கும் பாலை உறிஞ்சி சென்று விடுவதால், தொடர்ந்து பயிர்களின் வளர்ச்சி பாதிக்கும். இதனால் தான் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்றனர்.

செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பில் : ரூ 50 க்கு மேல்

செல்போனில் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் இனி விரிவான பில் பெறலாம் என்று டிராய் அறிவித்துள்ளது. இதற்கு அதிகபட்சம் ரூ 50 கட்டணம்.
இதுபற்றி தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான "டிராய்", வாடிக்கையாளர் பாதுகாப்பு விதிமுறைகள் 2012ல் கூறியிருப்பதாவது:
செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் போன் நிறுவனங்கள் விரிவான பில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சம் ரூ 50 கட்டணத்தில் வாடிக்கையாளர் இதை விண்ணப்பித்து பெறலாம். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் போன் நிறுவனம் பில் அளிப்பது கட்டாயம். கட்டணம் செலுத்தி பெறும் அழைப்புகள் விவரம், நேரம், நிமிடங்கள், கட்டணம் ஆகிய விவரங்கள் மட்டுமின்றி வாடிக்கையாளரின் கட்டண திட்டம், கணக்கில் மீதமுள்ள தொகை, மதிப்பு கூட்டு சேவை விவரம் ஆகியவற்றை இலவசமாகவும் போன் நிறுவனம் அளிக்க வேண்டும் என்று டிராய் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் வசதிக்காக கட்டண வவுச்சர்களும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ப்ளான், டாப் அப் மற்றும் ஸ்பெஷல் டேரிப் ஆகியவை அவை. இதனால், ஏராளமான கட்டண திட்டங்கள், டாப் அப் ப்ளான்கள் வாடிக்கையாளரை குழப்புவதில் இருந்து விடுதலை கிடைக்கும்.

உம்மன்சாண்டி : முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுப்பாடு தமிழகத்திற்கு வழங்கப்படாது

திருவனந்தபுரத்தில் கடந்த 4ம் தேதி முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் கேரள அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதன் பின் முதல்வர் உம்மன்சாண்டி நிருபர்களிடம் கூறுகையில், “முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும்போது அந்த அணையின் கட்டுப்பாடு தமிழ்நாட்டிற்கும் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அணையின் கட்டுப்பாட்டை கேரளா, தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு ஆகியவை கூட்டாக ஏற்கும். இது குறித்து உச்சநீதிமன்ற அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவில் 6ம் தேதி(நேற்று) அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.
உம்மன்சாண்டியின் இந்த பேச்சுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சியும் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தனது கருத்துக்கு எதிர்ப்பு அதிகரித்தை தொடர்ந்து முதல்வர் உம்மன்சாண்டி, அணைக்கு கூட்டு கட்டுப்பாடு குறித்து எதுவும் கூறவில்லை என்று பல்டி அடித்தார். இது தொடர்பாக அவர் கொச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும்போது அணையின் கட்டுப்பாட்டை தமிழ்நாட்டிற்கும் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானித்திருப்பதாக அனைத்து பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுள் ளன. ஆனால் நான் அவ்வாறு கூறவே இல்லை. புதிய அணை கட்டும் போது அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு தொடர்பான கட்டுப்பாடு குறித்துத்தான் நான் கூறியிருந்தேன். சிறுவாணி, பரம்பிக்குளம் ஆழியாறு ஆகிய அணைகளிலும் இதே போல்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதை மேற்கோள்காட்டியே கூறினேன். ஆனால் பத்திரிகைகள் தவறாக அணையின் கட்டுப்பாட்டை தமிழ்நாட்டிற்கு வழங்கப்போவதாக நான் கூறியதாக பிரசுரித்து விட்டன. புதிய அணை கட்டினால் அணையின் கட்டுப்பாடு முழுக்க முழுக்க கேரளாவிடம்தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் காய்கறி விலை குறைவு : அமெரிக்க மாணவிகள் பேட்டி

கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் நேற்று அமெரிக்க மாணவ, மாணவிகள் ஆய்வு நடத்தினர்.
அமெரிக்காவின் இதாக நகரில் அமைந்துள்ள கார்னல் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நார்ப்பொருள் அறிவியல் துறை, வேளாண்மை திட்டங்கள் மேம்படுத்தும் துறை, பூக்கள் விற்பனை மேம்படுத்தும் துறை, விளைபொருட்களின் தர மேம்பாட்டு துறை உள்ளிட்ட 4 துறைகளை சேர்ந்த 30 மாணவ, மாணவிகள் மற்றும் 6 பேராசிரியர்கள் கடந்த 2ம் தேதி முதல், வரும் 17ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
நேற்று முன்தினம் கோவை வேளாண்மை பல்கலைக்கு வந்த இவர்கள் அங்கு அனைத்து துறைகளையும் பார்வையிட்டனர். சர்வதேச வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி என்ற பாடத் திட்டத்தை அடிப்படையாக கொண்ட ஆய்வு பயிற்சிக்காக நேற்று காலை கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இப்பயிற்சியில் உழவர் சந்தையில் என்னென்ன காய்கறிகள், பழங்கள் உள்ளன. காய்கறிகளை எவ்வாறு விற்பனை செய்வது, உழவர்கள் எப்படி நுகர்வோரிடம் நேரிடையாக காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். காய்கறிகளின் தரத்தினை எவ்வாறு அறிவது, எந்தெந்த காய்கறிகளுக்கு எவ்வளவு விலை நிர்ணயம் செய்வது, மற்ற விற்பனை மையங்களைவிட உழவர் சந்தையில் எப்படி குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கிறது, உழவர் சந்தைக்கு நாள்தோறும் எத்தனை நுகர்வோர் போன்ற பல்வேறு விவரங்களை கேட்டறிந்தனர்.
ஆச்சரியமாக இருக்கு...
கார்னல் பல்கலை. மாணவிகள் சூசன்னா, ஜெசிகா, எலிசபெத், ஜோகில் ஆகியோர் கூறியதாவது:
அமெரிக்காவில் உள்ள கடைகளில் இந்தியாவில் உள்ளது போல விவசாயிகள் நேரடியாக வந்து காய்கறிகளை விற்பனை செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு காய்கறிக்கும் தனித்தனி கடைகள் இருக்கும். ஆனால், இங்கு உழவர் சந்தையில் ஒரே கடையில் பல்வேறு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
அத்தனையும் புதுசாக (ப்ரெஷ்) உள்ளது. ஆனால், அமெரிக்காவில் பதப்படுத்தப்பட்டுதான் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் காய்கறிகளின் விலையை காட்டிலும், அமெரிக்காவில் காய்கறிகளின் விலை அதிகளவில் உள்ளது.
இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர்.

கச்சத்தீவு : மீன் பிடிக்க தமிழக மீனவருக்கு உரிமை இல்லை

‘கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை கிடையாது’ என ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களுக்கு முப்படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, வக்கீல் பி.ஸ்டாலின் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக மீனவர்களுக்கு கப்பற்படை உயர் அதிகாரி மேற்பார்வையில், கடலோர காவல் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமல்படுத்தப்படவில்லை. இதையடுத்து, மத்திய கேபினட் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு செயலாளர், கடலோர காவல் படை துணை இயக்குனர் ஜெனரல், வெளியுறவு செயலாளர் ஆகியோர் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி வக்கீல் ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்தார். அதற்கு மத்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை இயக்குனர் தீபக்மித்தல், பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
இந்தியா & இலங்கை இடையே மன்னார் வளைகுடா, வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடல் எல்லை நிர்ணய ஒப்பந்தம் 1976ல் ஏற்பட்டது. மன்னார் வளைகுடாவில் 13வது கடல் மைலில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு நாடுகளின் கடல் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் ஓய்வு எடுக்கலாம், வலைகளை உலர்த்தலாம், அங்குள்ள அந்தோணியார் சர்ச் திருவிழாவில் கலந்து கொள்ளலாம். கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்க உரிமம் கிடையாது. கச்சத்தீவுக்கு செல்ல வழங்கப்பட்டுள்ள அனுமதியை, மீன் பிடி உரிமையாக தவறாக நினைத்து செயல்படுகின்றனர்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. 
பின்னர், மனு மீதான விசாரணை வரும் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.