Saturday 7 January 2012

குளித்தலை : நள்ளிரவில் லஞ்சம்: தாசில்தார் கைது

மணல் குவாரிக்கு தடையில்லா சான்று வழங்க நள்ளிரவில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குளித்தலை தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் மோகன். மணல் குவாரி நடத்தி வருகிறார். இவரது மணல் குவாரியின் உரிமத்தை புதுப்பிப்பதற்காக கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதில் சம்பந்தப்பட்ட குவாரியை ஆய்வு செய்து, தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குளித்தலை தாசில்தார் அலுவலகத்திற்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை அனுப்பப்பட்டது.
ஆனால் நீண்ட நாள் ஆகியும் மோகனுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து மோகன் நேற்று காலை குளித்தலை தாசில்தார் நேருவை நேரில் சந்தித்து தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு கேட்டார். இதற்கு தாசில்தார் நேரு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
இது குறித்து மோகன் திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி நேற்றிரவு குளித்தலையில் உள்ள அரசு அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்கும் தாசில்தார் நேருவின் வீட்டுக்கு மோகன் சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் தாசில்தார் நேரு, மோகனிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை வாங்கினார்.
அப்போது, லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி அம்பிகாபதி மற்றும் போலீசார் நேருவை கையும் களவுமாக கைது செய்தனர். அதன்பின் அவரது வீட்டிலும் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.

1 comment:

  1. Police Saaraaya case poduvthu pol ippo lanja olippu pirivu aarampiththu vittaatho...

    ReplyDelete