Friday 16 December 2011

கருங்கலில் 23-ல் லிம்கா சாதனைக்காக 1500 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி

குமரி மாவட்ட ஐக்கிய இளைஞர் பேரவையின் இணையதளம் தொடக்கவிழா நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரவை செயலாளர் டாக்டர் பெர்ஜின் பெனோ தலைமை வகித்தார். இணையத்தளத்தை அருட்தந்தை ஜார்ஜ்பொன்னையா, டாக்டர் சுமித்ரா, கான், ஸ்காட் கல்லூரி முதல்வர் ஜேசர் ஜெபநேசர் ஆகியோர் தொடங்கிவைத்தனர். பின்னர் பேரவை செயலாளர் டாக்டர் பெர்ஜின் பெனோ நிருபர்களிடம் கூறியதாவது:
குமரி மாவட்ட ஐக்கிய இளைஞர் பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா பேரணி வருகிற 23ம் தேதி கருங்கலில் நடக்கிறது. இதில் 1500க்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் கலந்துகொள்கின்றனர். விசாகபட்டினத்தில் கடந்த 2009ம் ஆண்டு 1008 கிறிஸ்துமஸ் தாத்தா ஒன்று கூடியதே லிம்கா சாதனை யாக உள்ளது. லிம்கா சாதனைக்காக இந்த கிறிஸ்துமஸ் தாத்தா பேரணி நடத்துகிறோம். பேரணி கருங்கல் சிஎஸ்ஐ ஆலயம் அருகில் இருந்து தொடங்கி கருங்கல் பஸ் நிலையத்தில் முடிகிறது.
இந்த நிகழ்ச்சியில் குமரிமாவட்டத்தின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும் அனைத்து மத தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா குழு போட்டியும் நடத்தப் பட்டு பரிசு வழங்கப்படுகிறது. போட்டி ஏற்பாடுகளை ஐக் கிய இளைஞர் பேரவை தலைவர் காட்வின், பொரு ளாளர் ராபின், சட்ட ஆலோ சகர் ஜோசப்ராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பள்ளி குழந்தைகளுக்கு புதிய "யு ட்யூப் ஸ்கூல்" : வீடியோ பார்த்து படிக்கலாம்

முற்றிலும் கல்வி தொடர்பான வீடியோக்களை மட்டுமே பார்க்கக்கூடிய "யு ட்யூப் ஸ்கூல்" என்ற புதிய இணைய தளத்தை கூகுள் நிறுவனம் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் நடைபெறும் விஷயங்களை உடனுக்குடன் வீடியோவாக யாரும் இடம்பெறச் செய்யக்கூடிய வகையில் யு ட்யூப் இணைய தளம் உள்ளது. கூகுள் நிறுவனத்தின் அதிக வரவேற்பு பெற்ற வீடியோ இணைய தளமான அதில் எல்லா துறைகளை சேர்ந்த கோடிக்கணக்கான வீடியோக்களை பார்க்க முடியும். அதில் பள்ளி கல்வியும் அடங்கும்.
ஆனால், நம்நாட்டில் �ஸ்மார்ட் கிளாஸ்� என்ற பெயரில் இணைய தள வழி கல்வி அளிக்கும் பள்ளிகள் இருந்தாலும், யு ட்யூப் பார்க்க பள்ளி மாணவர்களுக்கு தடை உள்ளது. ஏனெனில், அதில் குழந்தைகளின் வயதுக்கு பொருந்தாத விஷயங்களும் இடம்பெறுகிறது. எனவே, நல்ல வீடியோக்க ளை குழந்தைகள் வீட்டு கம்ப்யூட்டரிலோ, ஐபேட் போன்ற கருவிகளிலோ தொடர்பு கொள்ள முடியாத நிலை. இதை தவிர்க்கும் வகையில், யு ட்யூப் ஸ்கூல் என்ற பெயரில் இணைய தளத்தை கூகுள் இப்போது தொடங்கியுள்ளது. அதில் பள்ளிக் கல்வி தவிர மற்ற வீடியோக்களை காண முடியாது. இதனால், உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள பள்ளி கல்வி தொடர்பான வீடியோக்களை காட்டி பள்ளிகளின் ஸ்மார்ட் கிளாசில் ஆசிரியர்கள் சொல்லித் தர முடியும். ஐபேட் போன்ற தனிப்பட்ட கருவிகளிலும் மாணவர்கள் பயன் பெற முடியும்.
இதேபோல, யு ட்யூப் எஜுகேஷன் என்ற இணைய தளத்தில் இருந்து வீடியோக்களை ஆசிரியர்கள் தேர்வு செய்து மாணவர்களுக்கு அளிக்க முடியும். அதில் உள்ள 4.5 லட்சம் கல்வி வீடியோக்கள் யு ட்யூப் ஸ்கூல் இணைய தளத்துக்கு மாற்றப்படுகின்றன.

மின் பற்றாக்குறைக்கு யார் காரணம்? : 3,225 மெகா வாட் உற்பத்திக்கான மின்சார திட்டப் பணிகள் தாமதம்

மின்வாரியத்தின் அலட்சிய போக்கால், கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 92 மெகா வாட் மட்டுமே கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2006&07ம் ஆண்டில் மொத்த மின்தேவை 10,098 மெகா வாட். அப்போது, மொத்தம் 1 கோடியே 85 லட்சம் மின் நுகர்வோர்கள் இருந்தனர். அப்போதைய மின்பற்றாக்குறை 300 மெகா வாட் ஆக இருந்தது. தற்போது, தமிழ்நாட்டில் 2.23 கோடி மின் நுகர்வோர்கள் இருப்பதால், ஒரு நாளின் மின்சார தேவை 10,500 முதல் 12,000 மெகா வாட் ஆக அதிகரித்திருக்கிறது.
அனல், நீர், காற்று உள்ளிட்டவை மூலம் ஏறத்தாழ 10,122 மெகாவாட் மின் உற்பத்தியை மின்சார வாரியம் செய்கிறது. இதில், காற்றாலை மின் உற்பத்தி தற்போது மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. தற்போது 2,500 முதல் 3,000 மெகா வாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிச்சந்தையில் யூனிட் ஒன்றுக்கு ரூ 7 முதல் ரூ 13 வரை விலை கொடுத்து வாங்கப்படுகிறது. ஆனால், மின்சார பற்றாக்குறையை தீர்க்க உருவாக்கப்பட்ட மின்திட்டங்கள், திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்காமல், பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டில் மொத்தம் 10,122 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, 10,214 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 92 மெகா வாட் மட்டுமே மின்வாரியம் கூடுதலாக உற்பத்தி செய்துள்ளது, நுகர்வோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. மீதமுள்ள மின்திட்டங்கள் திட்டமிட்டப்படி செயல்படுத்தாமல், பல மாதங்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டு வருவதே, மின்பற்றாக்குறைக்கு காரணம். இதனால், வெளிசந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரூ 19 ஆயிரம் கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டுக்கு மின்சாரம் வாங்க ரூ 23 ஆயிரத்து 360 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் ஒரு நாள் வருமானம் ரூ 60 கோடி. இதில் மின்சாரம் வாங்குவதற்கு மட்டுமே ரூ 50 கோடி வரை செலவிடப்படுகிறது. இப்படி மின்சாரம் வாங்கவே பல ஆயிரம் கோடி கணக்கில் செலவிடும்போது, வாரியம் நஷ்டம் ஏற்படாமல் எப்படி லாபத்தில் இயங்கும் என்பது சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், ஆண்டுதோறும் மின் நுகர்வோர் எண்ணிக்கை 9 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது என்று தெரிந்திருந்தும், அதற்கான திட்டப்பணிகளை முடுக்கிவிடாமல் இருந்தது, மின்வாரியத்தின் அலட்சியமே காரணம். இறுதியாக, வாரியத்துக்கு பெரிய நஷ்டம் என்று கூறி மக்களின் தலையில் கட்டண உயர்வாக விழுகிறது.
இழுத்தடிப்புக்கு காரணம் என்ன?
கடந்த 2007ம் ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 3,225 மெகா வாட் மின்உற்பத்திக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திட்டமிட்டப்படி, இதில் பெரும்பாலான பணிகள் முடித்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மின்நிலையங்களில் தற்போது 75 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் 600 மெகா வாட் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தில், திட்டமிட்டப்படி கடந்த பிப்ரவரி மாதத்திலேயே பணிகள் முடித்து, மே மாதத்தில் உற்பத்தி தொடங்கி இருக்க வேண்டும். தற்போது, தேதி மாற்றப்பட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வடசென்னையிலேயே மற்றொரு 600 மெகா வாட் கொண்ட உற்பத்தி நிலையத்தில், கடந்த ஆகஸ்டில் பணிகள் முடிக்கப்பட்டு, நவம்பர் மாதத்தில் உற்பத்தி தொடங்கி இருக்க வேண்டும். இதுவும், தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேட்டூரில் 600 மெகா வாட் கொண்ட மின் உற்பத்தி நிலையம், திட்டமிட்டப்படி கடந்த ஏப்ரலில் பணிகள் முடிக்கப்பட்டு, ஜூலையில் உற்பத்தி தொடங்கி இருக்க வேண்டும். இது, கடந்த செப்டம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டு இருந்தது. பின்னர், தற்போது 2வது முறையாக 2012 மார்ச் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், தூத்துக்குடியில் 500 மெகா வாட் மின் உற்பத்தி நிலையத்தில், வரும் ஜனவரியில் பணிகள் முடிக்கப்பட்டு, மார்ச்சில் உற்பத்தி தொடங்க வேண்டும். ஆனால், இதற்கான பணிகளும் தாமதமாகவே நடக்கிறது.
மேற்கண்ட திட்டப் பணிகளில் தற்போது 70 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மொத்த திட்டப்பணிகளும் முடிக்கும்போது, தமிழகத்துக்கு 925 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இதற்கிடையே, அணு மின்நிலையத்தில் பணிகள் முடிக்கும் நிலையில், எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா.? அதன் மூலம் மின்சாரம் கிடைக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.    (Dinakaran)

அரிசி, பருப்பு, பூண்டு விலை குறைந்தது : விளைச்சல் அதிகரிப்பு எதிரொலி

விளைச்சல் அதிகரிப்பால் பருப்பு மற்றும் கொத்தமல்லி, பூண்டு, அரிசி விலை குறையத் தொடங்கியுள்ளது. பருப்பு கிலோவுக்கு ரூ 10 வரை குறைந்துள்ளது.
குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட வடமாநிலங்களில் நல்ல விளைச்சல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 2 கப்பல்களில் இறக்குமதி போன்ற காரணங்களால் பருப்பு விலை குறைய தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் 1 கிலோ துவரம் பருப்பு ரூ 70க்கு விற்கப்பட்டது ரூ 60க்கும், தான்சினியா துவரம் பருப்பு ரூ 55 லிருந்து ரூ 45 ஆகவும் குறைந்துள்ளது. அதாவது கிலோவுக்கு ரூ 10 வரை குறைந்துள்ளது. மேலும், உளுந்தம் பருப்பு ரூ 70 லிருந்து ரூ 60க்கும், உளுந்தம்பருப்பு(பர்மா), ரூ 65 லிருந்து ரூ 55க்கும், பாசிப்பருப்பு ரூ 75 லிருந்து ரூ 65க்கும்; 2ம் ரகம் ரூ 60 லிருந்து ரூ 50க்கும், கடலைப்பருப்பு ரூ 60 லிருந்து ரூ 54க்கும்; 2ம்ரகம் ரூ 55லிருந்து ரூ50க்கும் விற்கப்படுகிறது. புது வரவு அதிகரிப்பு மற்றும் இறக்குமதியால் இந்த விலை வருங்காலங்களில் இன்னும் குறைய வாய்ப்புள்ளது.
அதே போல் கர்நாடகா, ஓசூர் போன்ற பகுதிகளில் விளைச்சல் அதிகரிப்பால் புளி முதல் ரகம் கிலோ ரூ 130 லிருந்து ரூ 110; 2ம் ரகம் ரூ 110லிருந்து ரூ 80க்கும், வத்தல் முதல் ரகம் ரூ 200 லிருந்து ரூ 160க்கும், 2ம் ரகம் ரூ 170லிருந்து ரூ 120க்கும், கொத்தமல்லி ரூ 70லிருந்து ரூ 60க்கும், மலைப்பூண்டு ரூ 130 லிருந்து ரூ 100க்கும், நாட்டுப்பூண்டு முதல் ரகம் ரூ 140லிருந்து ரூ 110க்கும், 2ம் ரகம் ரூ 110லிருந்து ரூ 80 ஆகவும் விலை குறைந்துள்ளது.
ரூபாலி அரிசி கிலோ ரூ 20 லிருந்து ரூ19க்கும், அதிசய பொன்னி ரூ 24 லிருந்து ரூ 22க்கும், இட்லி அரிசி முதல் ரகம் ரூ 22லிருந்து ரூ 19க்கும்; 2ம் ரகம் ரூ 20லிருந்து ரூ 17க்கும், பாபட்லா புதுசு ரூ 26லிருந்து ரூ 24க்கும், பாபட்லா பழையது ரூ 30லிருந்து ரூ 28க்கும், வெள்ளை பொன்னி ரூ 38 லிருந்து ரூ 36க்கும், பொன்னி பச்சரிசி ரூ 22லிருந்து ரூ 20க்கும், புது பச்சரிசி ரூ 30லிருந்து ரூ 28க்கும், பாசுமதி அரிசி முதல் ரகம் ரூ 85 லிருந்து ரூ 80க்கும்; 2ம் ரகம் ரூ 65லிருந்து ரூ58க்கும், 3ம் ரகம் ரூ 50லிருந்து ரூ 43 ஆகவும் குறைந்துள்ளது.
ஆந்திராவில் இருந்து புது அரிசி வரத் தொடங்கியுள்ளதாலும், காஞ்சிபுரம், திண்டிவனம், ஆரணி, செங்கல்பட்டு, பொன்னேரி, ரெட்ஹில்ஸ் உள்பட பல பகுதிகளில் நல்ல விளைச்சல் காரணமாகவும் அரிசி விலை குறைந்துள்ளது. அடுத்தவாரம் இந்த விலை கிலோவுக்கு ரூ 3 வரை குறைய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.சொரூபன் தெரிவித்தார். சில்லரை கடைகளில் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ 5 வரை அதிகமாக விற்கப்படுகிறது.

இந்த ஆண்டு 9 மற்றும் 10ம் வகுப்புக்கும் செய்முறைத் தேர்வு : 10ம் வகுப்பு தேர்ச்சியை அதிகரிக்க அதிரடி முடிவு

அறிவியலுக்கு மதிப்பெண் தளர்வு
எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், 25 மதிப்பெண் செய்முறைக்கும், 75 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
செய்முறையில் 20 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வில் 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியல், கணக்கு பாடங்களில்தான் அதிக அளவில் மாணவர்கள் தோல்வி அடைகின்றனர். இதனால், அந்த பாடங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
மேலும், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், செய்முறை தேர்வில் 20 மதிப்பெண், எழுத்துத் தேர்வில் 15 மதிப்பெண் எடுத்து மொத்தம் 35 மதிப்பெண்கள் அறிவியல் பாடத்தில் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிக்கவும் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு தனியாக ஒரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. ஆனால், எழுத்துத் தேர்வில் 35 அல்லது அதற்கு மேலும் மதிப்பெண் எடுத்து, செய்முறையில் 20 மதிப்பெண்ணுக்கு குறைவாக எடுத்தால் தோல்வி தான்.
இந்த புதிய திட்டத்தின்படி கிராமப்புற மாணவர்களும் அறிவியல் பாடத்தில், இந்த ஆண்டு அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையில், பத்தாம் வகுப்பில் கணக்கு, அறிவியல் பாடங்கள் சற்று கடினமாக உள்ளது. இதுதான், மாணவர்களை கவலை அடையச் செய்துள்ளது. இந்த ஆண்டு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால், பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகளை மார்ச்சில் நடத்த தேர்வுத் துறை உத்தேசித்துள்ளது.

களியக்காவிளை - நாகர்கோவில் புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

களியக்காவிளையில் இருந்து நாகர்கோவிலுக்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கல்லுக்கட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக களியக்காவிளையில் இருந்து திட்டங்கனாவிளை, தாரப்பழஞ்சி, அதங்கோடு, காப்புக்காடு, நட்டாலம் வழியாக நாகர்கோவில் வரையும் அளவீடு செய்யப்பட்டு ள்ளது. நிலம் ஆர்ஜிதம் செய்வதற்கான பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் புதிதாக புறவழிச்சாலை அமையும் போது 500க்கும் மேற்பட்ட வீடுகள், வழிபாட்டு தலங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே புறவழிச்சாலை திட்டத்தை கைவிட்டு என்.எச்.47ல் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதனிடையே புறவழிச்சாலைக்காக கையகப்படுத்தும் நிலத்துக்கு சொந்தக் காரர்கள் அரசிடம் இருந்து இழப்பீடு பெற பூத்துறையை அடுத்த கல்லுக்கெட்டியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்புத்துறை அலுவலகத்திற்கு தங்கள் நிலத்திற்கான ஆவணங்களை காண்பித்து செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்காக நேற்று 50க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் நிலத்திற்கான ஆவணத்துடன் அலுவகத்திற்கு வந்தனர்.
அப்போது நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரி வித்து அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புறவழிச்சாலைக்கு எதிராக பேராட்டம் நடத்தி வரும் என்.எச். 47 பாதுகாப்பு நடவடிக்கை குழு தலைவர் ஜார்ஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுலீப், லெட்சுமி நாரா யணன், புறவழிச்சாலை நலச்சங்க தலைவர் ஜஸ்டஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் கலைந்து சென்றதை அடுத்து நெல்லையில் இருந்து வந்த சிறப்பு தாசில்தார் மற்றும் அதி காரிகளிடம் இழப்பீட்டு நடவடிக்கைக்காக தங்கள் நில ஆவணங்களை காண்பித்தனர். (Dinakaran)

உயர் நீதிமன்றத்தில் கேரளா புதிய மனு : அறிக்கையில் குட்டிகரணம்

முல்லைப்பெரியாறு அணை விவகாரம்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு மேற்கொண்டுள்ள பாது காப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் கேரள அட்வகேட் ஜெனரல் கே.பி. தண்டபாணி உயர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், முல்லை பெரியாறு அணை யின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் எந்த ஆபத்தும் ஏற்ப டாது என்றும் நில நடுக்கம் காரண மாக அணை உடைந்தால் கூட அதிலிருந்து வெளி யேறும் தண்ணீ ரை இடுக்கி, குள மாவு, செருதோணி ஆகிய அணை கள் தாங்கும் என்று கூறியிருந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில், அரசு சார்பில் வேறொரு அறிக்கை விரைவில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும� இதற்காக 4 பேர் அடங்கிய அமைச்சரவை கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கேரள அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அட்வகேட் ஜெனரலின் கருத்துக்கு நேர் எதிரான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
முல்லை பெரியாறு அணை உடைந்தால் 40 லட்சம் மக்களை பாதிக்கும். அணை யில் 136 அடி தண்ணீரை தேக்கி வைத்தால் கூட பாதுகாப்பு இல்லை. அணை உடைந்தால் அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை தாங்கும் சக்தி இடுக்கி மற்றும் செறுதோணி அணைகளுக்கு கிடையாது. ஏனென்றால் இந்த இரு அணைகளுக்கும் மதகு இல்லை. குளமாவு அணை க்கு மட்டுமே மதகு உள்ளது. முல்லை பெரியாறு அணை யில் நடைபெற்ற பலப்படுத்தும் பணிகள் போதுமானதாக இல்லை. அணை மிகவும் பலவீனமாக இருப்பதால் கேரள அரசு புதிய அணை கட்ட தீர்மானித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் மஞ்சுளா, ராமச்சந்திரன் நாயர் ஆகியோர் விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

முதல்வர் பதவியை தராவிட்டால் : பாஜ தலைவரிடம் எடியூரப்பா மிரட்டல்

கர்நாடகாவில் விபரீதம் நடக்கும்
கர்நாடக பாஜ.வில் தனக்கு ஆதரவாக 72 எம்எல்ஏ.க்கள் இருப்பதால் மீண்டும் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
இவர் மேலிட தலைவர்களை சந்தித்து முதல்வர் பதவி அல்லது மாநில பாஜ தலைவர் பதவி பெறுவதில் குறியாக இருக்கிறார். அதே நேரம், "எனக்கு பதவி ஆசையில்லை. கர்நாடகாவில் கட்சியை வழி நடத்துவது பற்றியும், மேலவை தேர்தல் குறித்தும் ஆலோசிக்க டெல்லி வந்தேன்" என்று எடியூரப்பா கூறினார். இந்த நிலையில், டெல்லியில் பாஜ தேசிய தலைவர் நிதின் கட்கரியை சந்தித்த எடியூரப்பா, முதல்வர் பதவி வழங்க வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளார். "தமிழக முதல்வர் ஜெயலலிதா, எஸ்.எம் கிருஷ்ணா ஆகியோர் மோசடி வழக்கில் சிக்கியிருந்தும் பதவியில் நீடிக்கிறார்கள். எனவே, மீண்டும் எனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும்." பதவி வழங்காத நிலையில் கட்சியில் நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்வேன். இதனால் கர்நாடக பாஜ.வில் விபரீதங்கள் ஏற்படும்� என்று எச்சரித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவர் அத்வானியையும் எடியூரப்பா சந்தித்தார். 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, அத்வானியிடம் எடியூரப்பா தனது கோரிக்கை குறித்து விளக்கி கூறினார். இந்த சந்திப்பின்போது 10 எம்.பிக்கள் உடன் இருந்தனர். தனக்கு ஆதரவாக இருக்கும் எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் கட்கரியிடம் எடியூரப்பா கொடுத்துள்ளார். (Dinakaran)

பிளஸ் 2 தேர்வு மார்ச் 8ல் ஆரம்பம் : அட்டவணை அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி மார்ச் 30ம் தேதி முடிகிறது. தேர்வு கால அட்டவணையை அரசு பொது தேர்வுகள் துறை நேற்று அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த பிளஸ்2 தேர்வை 7.50 லட்சம் மாணவ&மாணவிகள் எழுதினர். இந்த ஆண்டு 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள். 2008ம் ஆண்டில் இருந்து தேர்வு எழுதுவோருக்கு 15 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் அதே போல கூடுதலாக 15 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு நேரம் ஆகும். மருத்துவம், பொறியியல் படிப்புக்கு முக்கிய படமான இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு இடையே விடுமுறை நாட்கள் உள்ளன.

கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை : சேலத்தில் பரபரப்பு

சேலம் அம்மாபேட்டையில் தனியார் கோயிலுக்குள் எஸ்.சி., மக்கள் நுழையக்கூடாது என திடீர் தடை விதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோயிலை பெண்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில் சீதா ராமச்சந்திரமூர்த்தி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ராமர் கோயில் உள்ளது. 1986ம் ஆண்டில் இந்த கோயில் கட்டப்பட்டது. கிருஷ்ணா நகர், வித்யா நகர், பச்சப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் வழிபட்டு வந்த நிலையில், திடீரென்று நேற்று முதல் பச்சப்பட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்த நோட்டீஸ் கோயில் கதவுகளில் ஒட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மறு தீர்மானம் நிறைவேற்றும் வரை கோயில் நடை சாத்தப்படுகிறது என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோயில் நிர்வாகத்தின் திடீர் முடிவால், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் கோயில் முன் திரண்டுவந்து தேவஸ்தான நிர்வாகிகளைக் கண்டித்து கோஷம் போட்டனர். தடை அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து பச்சப்பட்டியைச் சேர்ந்த சித்ரா, சீரங்காயி, சுகுணா, ஜானகிராமன் ஆகியோர் கூறியது: இத்தனை ஆண்டுகளாக அனைத்து மக்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கோயில் விரிவாக்கப் பணிகளுக்காக எங்களிடமும் நன்கொடை வசூலித்துள்ளனர். இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்பது ஜாதி மோதலை உருவாக்குவது போல உள்ளது. நிர்வாகத்தின் இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோயிலின் அர்ச்சகர் கண்ணன் கூறுகையில், “கோயில், நிர்வாகிகள் நேற்று இரவு 11 மணியளவில் கூடி, இந்த முடிவைஎடுத்துள்ளனர். இதுபற்றி, தேவஸ்தானத்தின் சிறப்பு ஆலோசகருக்கும் கூட எதுவும் தெரிவிக்கப்படவில்லை,’’ என்றார்.
இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.