Sunday 4 December 2011

தமிழக ஜீப்களை மறித்து அடாவடி வசூல் : புதிய அணை கட்ட நிதி

பெண்களிடம் அத்து மீறல் : கம்பம் மெட்டு அருகே பதற்றம்
தமிழகத்திலிருந்து கேரள தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் ஜீப்புகளை கம்பம் மெட்டில் இன்று காலை வழிமறித்து, மிரட்டி கேரள கும்பல் பணம் பறிக்கும் அடிவாடியில் இறங்கியுள்ளது. மேலும் ஜீப்பில் இருந்த பெண்களை கீழே இழுத்து போட்டு வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. நில அதிர்வுகளால் அணை பலமிழந்து விட்டதாகவும் பேரழிவு ஏற்பட போகிறது என்றும் கேரள மக்களிடையே பீதி கிளப்பப்பட்டு வருகிறது. இதனால் அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில், கேரளாவில், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்க துவங்கியுள்ளன. தமிழக பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நேற்று பெரியாறு அணைக்குள் அத்துமீறி புகுந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் தலைமதகு பகுதிக்குள் நுழைந்த அம்மாநில இளைஞர் காங்கிரசார் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய அலுவலகங்களை சூறையாடினர். பணியில் இருந்த ஊழியர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வனப்பகுதிக்குள் ஓடி ஒளிந்தனர். முன்னதாக ஊர்வலமாக வந்த போது, உருட்டுக்கட்டைகளை கொண்டு கண்ணில் தென்பட்ட தமிழ் விளம்பர போர்டுகளை உடைத்தெறிந்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். அசம்பாவிதங்களை தடுக்க பெரியாறு அணையில் நூற்றுக்கணக்கான கேரள போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் உச்சகட்டமாக தற்போது கேரள எல்லையில் தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் செயலில் இறங்கியுள்ளனர். தேனி மாவட்டத்தில் சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர், கோம்பை, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரள மாநிலம் நெடுங்கண்டம், கட்டப்பணை, மேட்டுக்குழி, மாழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலம், காபி தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.
தோட்ட உரிமையாளர்கள் ஜீப்புகளை மாத வாடகைக்கு பேசி, தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து செல்வர். தமிழ்நாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஜீப்புகள் கேரள மாநிலத்திற்கு தினசரி வேலையாட்களை ஏற்றி சென்று வருகின்றன.
இன்று காலை வேலையாட்களுடன் சென்ற ஜீப்புகளை கம்பம் மெட்டு கேரள எல்லையில் மறித்த சிலர், நாங்கள் புதிய அணை கட்ட வேண்டும். அதற்கு பணம் வசூலிக்கும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் கேரள மாநிலத்திற்குள் செல்ல வேண்டும் என்றால் ரூ.100 தர வேண்டும் என்று தகராறு செய்தனர்.
பணத்தை வாங்கிக் கொண்டு, டிரைவர் அசோசியேசன் என்று மலையாளத்தில் அச்சடித்த ரசீதை கொடுத்தனர். அதில், எந்த பதிவெண்ணும் கிடையாது. இதனால் சந்தேகமடைந்த ஒரு சில ஜீப் டிரைவர்கள், பணம் கொடுக்க முடியாது என்றனர். ஆத்திரமடைந்த அக்கும்பல், வேனில் அமர்ந்திருந்த தமிழ் பெண்களை வெளியே இழுத்துப் போட்டு ரகளையில் ஈடுபட்டனர். பணம் கொடுக்காமல் யாரும் கேரளாவுக்குள் நுழைய முடியாது என்று எச்சரித்தனர். இதனால் மற்ற ஜீப்புகளில் அமர்ந்திருந்த பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கேரளா சென்ற ஜீப்புகளை மறித்து, பெண்களிடம் அத்துமீறி நடந்த சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் வேலைக்கு செல்லாமல் மீண்டும் வீடு திரும்பி விட்டனர். இந்தச் சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் கேரள மாநிலத்தவரின் அராஜக போக்கை தடுத்த நிறுத்த வேண்டும் என தமிழக மற்றும் மத்திய அரசை பல்வேறு அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.         (Tamil Murasu)

தோவாளையில் வரலாறு காணாத விலைஉயர்வு : மல்லிகை பூ கிலோ ரூ 2000

(4.12.11) குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. பெங்களூர், ஓசூர், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் இருந்து இங்கு பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது கார்த்திகை மாதம் என்பதாலும், அதிக முகூர்த்த நாட்கள் இருப்பதாலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன.
வழக்கமாக கிலோ ரூ.250, 300 ஆக இருக்கும் மல்லிகை பூவின் விலை, கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து ரூ.500 ஆக உயர்ந்தது. நேற்று 3 மடங்கு விலை உயர்ந்து கிலோ ரூ. 1500க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று அது மேலும் அதிகரித்து கிலோ ரூ. 2000 என விற்கப்பட்டது. தோவாளை மார்க்கெட் வரலாற்றில் இது அதிகபட்ச விலையாகும்.
சபரிமலை சீசன், திருமண முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால் மல்லிகை விலை வரலாறு காணாத உயர்வை அடைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதே போல் பிச்சி பூ கிலோ ரூ.625க்கு விற்கப்பட்டது. அரளி ரூ. 60, சம்பங்கி ரூ. 100, கிரேந்தி ரூ.40, வாடாமல்லி ரூ. 40, கோழிக்கொண்டை ரூ. 40க்கு விற்பனையானது. பனிப்பொழிவு அதிகரித்தால் பூக்களின் விலை இன்னும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஸ், ரயில் விளம்பரத்தை பார்த்து ஏமாறாதீங்க : அதிர்ச்சி ரிப்போர்ட்

பஸ், ரயில், பொது இடங்களில், இப்படி ஒரு பிட் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆட்கள் தேவை. இந்திய அரசு நிறுவனத்தில் பகுதி நேர வேலைக்கு ரூ.8,000 சம்பளம், முழு நேர பணிக்கு ரூ.12,000, ஞாயிறு மட்டும் ரூ.5,000 சம்பளம். வயது, கல்வி தடையில்லை� என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்யப்பட்டிருக்கும்.
அந்த விளம்பரத்தை பார்த்து போனால் என்ன நடக்கும் தெரியுமா...? ஏமாந்தவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா...? இதோ ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.
ஞாயிறு மட்டும் வேலை பார்த்தால் அஞ்சாயிரமா என்று நாமும் ஒரு விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று பார்த்தோம்.
அங்கு, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒரே ஹாலில் அமர வைக்கப்பட்டிருந்தனர். முதலில் அட்மிஷன் பீஸ் என்று கூறி ரூ.20 வாங்கப்பட்டது.
பேச்சு திறமை மிக்க ஒரு நிர்வாகி இனிக்க, மணக்க, ருசிக்க பேசினார். அவர் பேசப்பேச இளைஞர்கள் முகம் பிரகாசம் அடைந்தது. ஏதோ அப்போதே தாங்கள் டாட்டா பிர்லா ஆகிவிட்டதாக பரவசம் அடைந்தார்கள் சிலர். அப்போது அந்த நிர்வாகி, அடுத்த அஸ்திரத்தை ஏவினார். �ரூ.4,000 கட்டினால் போதும், எந்த வேலையும் பார்க்க வேண்டியதில்லை. போன் மூலம் எஸ்.எம்.எஸ். செய்து, வேலை தேடும் இளைஞர்களை இங்கு வரவைக்க வேண்டும். ஒரு ஆள் எத்தனை ஆட்களை சேர்த்து விடுகிறாரோ? அதற்கு தகுந்த கமிஷன் தரப்படும்� என்றார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
பேச்சு திறமை மிக்க ஒரு நிர்வாகி இனிக்க, மணக்க, ருசிக்க பேசினார். அவர் பேசப்பேச இளைஞர்கள் முகம் பிரகாசம் அடைந்தது. ஏதோ அப்போதே தாங்கள் டாட்டா பிர்லா ஆகிவிட்டதாக பரவசம் அடைந்தார்கள் சிலர். அப்போது அந்த நிர்வாகி, அடுத்த அஸ்திரத்தை ஏவினார். �ரூ.4,000 கட்டினால் போதும், எந்த வேலையும் பார்க்க வேண்டியதில்லை. போன் மூலம் எஸ்.எம்.எஸ். செய்து, வேலை தேடும் இளைஞர்களை இங்கு வரவைக்க வேண்டும். ஒரு ஆள் எத்தனை ஆட்களை சேர்த்து விடுகிறாரோ? அதற்கு தகுந்த கமிஷன் தரப்படும்� என்றார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
3 நாட்களுக்கு பிறகு மீண்டும் அங்கு சென்று பார்த்தோம். சிலர் ரூ.4,000 கட்டிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் கேட்டதற்கு, �ரொம்ப கஷ்டப்பட்டு வீட்டில் இருக்கும், கொலுசு, பழைய பாத்திரங்கள், பட்டுப் புடவையை விற்று காசு புரட்டினோம். எல்லாம் ஒரு நம்பிக்கையில்தான்� என்றனர். சிலர் பெற்றோருடன் வந்தும் பணம் கட்டினார்கள்.
சரி... அப்படி பணம் கட்டி சேர்ந்தவர்கள் நல்ல சம்பாதிக்கிறார்களா என்றும் விசாரணை மேற்கொண்டோம். பணம் கட்டிய சிலரை நண்பர்களாக்கிக் கொண்டு, அவர்களின் செல்போன் நம்பரை வாங்கி அவ்வப்போது விசாரித்தோம். நிஜமாகவே அவர்கள் பாவம்தான். பணம் கொடுத்து ஏமாந்ததுதான் மிச்சம்.
சூளைமேட்டை சேர்ந்த முருகன் என்பவர் கூறுகையில், �ஒரு மெம்பரை சேர்ப்பதற்கு படாத பாடு பட வேண்டியிருக்கிறது. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எஸ்.எம்.எஸ். பண்ணிக் கொண்டே இருக்கிறேன். ஒரு மாதத்தில் குறைந்தது இருபது பேரையாவது சேர்த்து விட்டால்தான் மாசம் இரண்டாயிரம் ரூபாயாவது கிடைக்கும். ஆனால் இதில் என்ன கொடுமை என்றால் இரண்டு பேரை சேர்ப்பதுகூட முடியாத காரியம். கைக்காசை போட்டு பிட்நோட்டீஸ் அடித்து, பசை வாங்கி, பகல் இரவு என்று நானே ஒட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது போன் செய்து வரமாட்டார்களே என காத்திருக்கிறேன். கொடுத்த காசை திருப்பவே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்றார்.
இவரைப் போல்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் அடியாட்களால் தாக்குவதாகவும் ஏமாந்தவர்கள் கூறுகிறார்கள். இதைப் போன்று அப்பாவி இளைஞர்களை குறிவைத்து அவர்களின் நம்பிக்கையோடும், எதிர்காலத்தோடும் விளையாடும் திருட்டுக் கும்பல்களை காவல் துறை களையெடுத்தால் தான் நல்லது. இருப்பினும் இளைஞர்களும் சற்று உஷாராகத்தான் இருக்க வேண்டும்.   (தினகரன்) 

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : தமிழக அரசு புறக்கணிப்பு

டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அரசு நாளை ஏற்பாடு செய்திருக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு கூறி வருகிறது. கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக, முல்லை பெரியாறு அணை பலவீனம் அடைந்திருப்பதாகவும், இதனால் அணை உடைந்து பேரழிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் அப்பகுதி மக்களிடையே கேரள அரசு பீதியை கிளப்பி வருகிறது. புதிய அணை கட்டியே தீர வேண்டும் என்று கேரளாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு, கேரளாவின் விஷம பிரசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கேரள முதல்வர் உம்மன்சாண்டி கடிதம் எழுதியதுடன், பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று முன்தினம் டெல்லியில் நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்.
இதையடுத்து, பிரச்னைக்கு தீர்வு காண தமிழகம், கேரளா ஆகிய இரு மாநில அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டுமாறு, மத்திய நீர்வளத்துறைக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். இதையடுத்து, டெல்லியில் மத்திய அரசு அதிகாரிகளின் முன்னிலையில் தமிழக, கேரள அதிகாரிகளின் கூட்டம் நாளை நடைபெறும் என்று மத்திய நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து, தமிழக கவர்னர் ரோசய்யாவை நேற்று சந்தித்து அவர் மனு கொடுத்தார். பல கட்சி தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் தமிழக அரசு கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தினர்.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் நாளை நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் எம்.சாய்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக டெல்லியில் 5ம் தேதி நடக்க உள்ள அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையில், தமிழக அரசு ஏற்கனவே செய்த முடிவின்படி கலந்து கொள்ளாது என தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார்’’ என்று கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தையை தமிழக அரசு புறக்கணித்துள்ள நிலையில் டெல்லியில் நாளை இக் கூட்டம் ரத்து செய்யப்படும் என தெரிகிறது.

ஐபிஎல் சீசன் 5 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ராகுல் டிராவிட் கேப்டன்

ஐபிஎல் டி20 2012 தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து 4 சீசனில் பொறுப்பு வகித்த ஆஸ்திரேலிய சுழல் நட்சத்திரம் ஷேன் வார்ன், 2011 சீசனுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது தலைமையிலான ராஜஸ்தான் அணி 2008ல் நடந்த முதலாவது ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
முதல் 3 சீசனிலும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய ராகுல் டிராவிட், இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரூ.2.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஷேன் வார்ன் ஓய்வு பெற்றதால், ஐபிஎல் சீசன் 5 தொடருக்கான புதிய கேப்டனாக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், ஜோகன் போத்தா (தெ.ஆப்ரிக்கா), பால் காலிங்வுட் (இங்கிலாந்து), ஷேன் வாட்சன் (ஆஸி.) ஆகியோரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்ட நிலையில் அதிக ஆதரவுடன் டிராவிட் தேர்வு செய்யப்பட்டதாக ராயல்ஸ் அணி நிர்வாகி ரகு அய்யர் நேற்று தெரிவித்தார்.
2011 சீசனில் ராஜஸ்தான் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடிய டிராவிட் 343 ரன் (சராசரி 31.18) எடுத்தார். தற்போது நல்ல பார்மில் உள்ள டிராவிட், டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக விளையாடி ரன் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

சென்னையில் மட்டும் 50 ஏஜென்ட்கள் : அயல் நாடுகளுக்கு ஆள் கடத்தல்

அமோகமாய் நடக்கும் அதிர்ச்சி பிசினஸ்
அயல்நாடுகளுக்கு ஆள் கடத்தும் பிசினஸ் அமோகமாக நடக்கிறது சென்னையில் & இப்படியொரு தகவல், அதிலும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகத்தான் இருக்கும்.
அபின், ஹெராயின், ஆயுதம் என்று வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் பொருட்களின் பட்டியல் கொஞ்சம் பெருசு. அதிலே புதிதாக இடம் பிடித்திருப்பது ஆள் கடத்தல். அப்படியென்றால்? பணத்துக்காக ஆளை கடத்துவது பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். பணம் வாங்கிக் கொண்டு ஆளை கடத்துவது கேள்விப்படாத விஷயம். அதற்காக சென்னையில் 50 ஏஜென்ட்கள் வரை இருக்கிறார்கள் என்றால், இந்த வியாபாரம் எந்தளவுக்கு கொடிகட்டி பறக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அந்த 50 பேரும் விலை உயர்ந்த, வெளிநாட்டு இறக்குமதி கார்களில் வலம் வரக் கூடிய அளவுக்கு இதிலே பணம் புழங்குகிறது என்பதால், இந்த விவகாரத்தை சிபிஐ கையில் எடுக்க வேண்டும் என்ற பேச்சு, மெல்ல கிளம்பியுள்ளது.
அயல் நாடுகளுக்கு ஆள் கடத்தல் எப்படி நடக்கிறது? இங்கிருந்தோ அல்லது இலங்கையில் இருந்தோ ஒருவர், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி, நார்வே என ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு செல்ல விரும்பினால், அவர்களை விரும்பிய நாட்டுக்கு பத்திரமாக கொண்டு போய் இறக்கி விடுவது தான் இந்த ஏஜென்ட்களின் வேலை.
அமெரிக்காவுக்கு மட்டும் அனுப்ப முடியாது; எனென்றால், அங்கே கெடுபிடிகள் அதிகம்.
கடத்தலுக்கு தேவைப்படும் விசா பெறுவதற்காக, இவர்கள் கைவசம் நிறைய ஐடியாக்கள் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் சினிமா ஷூட்டிங். அதற்கு இமிகிரேஷன், சிஐஎஸ்எப், கஸ்டம்ஸ் என பல துறை அதிகாரிகளில் சிலரும் உடந்தை. இத்தாலிக்கோ நார்வேக்கோ செல்ல விரும்பும் நபருக்கு 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான பான் கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றை இங்கேயே ஏற்பாடு செய்து தருகின்றனர். லோக்கல் முகவரியுடன் எல்லாம் ஒரிஜனல்.
ஆனால், அந்த நாட்டில் இருந்து விசா பெறுவதில்தான் இவர்களிடம் வித்தியாசத்தை காண முடியும். அதாவது டூபாக்கூர் பெயரில் ஒரு சினிமா கம்பெனி ஆரம்பிப்பார்கள். அதன் படப்படிப்புக்காக அந்த நாட்டில் அனுமதி கேட்பார்கள். இங்கிருந்து படப்பிடிப்பு குழுவினர் 50 பேர் வரை வருவார்கள் என்று சொல்வார்கள். அந்த 50 பேருக்கும் �சங்கன்� விசா கிடைக்கும். அதை பயன்படுத்திக் கொண்டு, இலங்கையை சேர்ந்தவர்களையும், காபிபோசா, ஃபெரா போன்ற சட்டச் சிக்கலில் தேடப்படும் பெரிய முதலைகளையும், சினிமா கம்பெனி பேனரில் நாடு கடத்தி விடுவார்கள். ஒரு டிரிப்புக்கு ரூ 20 கோடி வரை பணம் பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கு கைமாறாக பங்குப் பணம், அதிகாரிகள் சிண்டிகேட் வரைக்கும் போய் சேர்ந்து விடும். இதில் அதிகபட்ச தொகையை கொடுப்பது இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களே அதிகளவில் வெளிநாடுகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது. இதற்கான கட்டணம் கூட, சில நேரங்களில் பாதி இங்கே, மீதி அங்கே என்ற கணக்கில் வசூலிக்கப்படுகிறது.
கொச்சி, திருவனந்தபுரம், ஐதராபாத், சென்னை என பல வான் மார்க்கமாக ஆள் கடத்தல் தொழில் தடையின்றி நடந்து வருகிறது. அதை தடுக்க வேண்டியவர்கள் கண்டும் காணாமல் இருப்பதோடு மட்டுமல்ல; இப்படியொரு வியாபாரம் நடக்கிற தகவல் கூட கசியாமல் பார்த்துக் கொள்வார்கள். எதற்காக போகிறார்கள்? எத்தனை முறை போயிருக்கிறார்கள் என எதையும் ஆராய்வதில்லை. இதில் பிரபலங்களும் தெரிந்தோ, தெரியாமலோ சம்பந்தப்பட் டிருப்பதால், பணம் மட்டும் ரூ 500 கோடி வரை புழங்குவதாக தெரியவந்துள்ளது.
இதிலே அழைத்துச் செல்லப்படுபவர்கள் அங்கே இறங்கிக் கொண்டதும், ஏஜென்ட்களின் ஆட்களாக சென்ற குருவிகள் மட்டும் திரும்பி வருவது வழக்கம். அவர்களும் வெறும் கையோடு வருவதில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொருட்களை கடத்தி வந்து விடுகின்றனர். அதில் தேறும் பணம் தனிக் கணக்கு.
சமீபத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இப்படி அனுப்பப்பட்ட கும்பல் பிடிபட்ட பிறகுதான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதையடுத்து, இந்த விவகாரம் குறித்தும் அதன் பின்னணி பற்றியும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, நேர்மையான அதிகாரிகள் மட்டத்தில் எழுந்துள்ளது.

நாகர்கோவில் நகராட்சி குப்பையிலிருந்து மின்சாரம்

புனே நிறுவனம் கலெக்டருடன் ஆலோசனை
நாகர்கோவில் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் திடக் கழிவுகள் வலம்புரிவிளை உரக்கிடங்கு பகுதியில் கொட்டப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறு கொட்டப்பட்ட கழிவுகள் மலைபோல் அங்கு தேங்கியுள்ளன. அப்பகுதியில் அவ்வப்போது தீவிபத்தும் ஏற்படுகிறது. இந்த உரக்கிடங்கை இடம்மாற்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
பல்வேறு பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டும் அந்தந்த பகுதி மக்களின் எதிர்ப்பால் குப்பை கிடங்கு இடம்மாற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் பலரும் தேர்தலின்போது உரக்கிடங்கை இடமாற்றம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதிகள் அளித்தும் கடந்த பல ஆண்டுகளாக அது நிறைவேற்றப் படவில்லை.
இந்நிலையில் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக குப்பைகள் அதிகரித்துள்ளன. இந்த குப்பைகளை பயனுள்ளதாக மாற்றும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நகராட்சியில் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது பிளாஸ்டிக் கழிவுகள், கேரி பேக்குகள் அடங்கிய மக்கும் குப்பைகள் அளவு குறைந்துள்ளதால் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என இரண்டாக பிரிக்கப் பட்டு மக்கும் குப்பைகள் அடங்கிய திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிப்பது குறித்து ஆலோசனை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் மதுமதி தலைமை வகித்தார். நகராட்சி தலைவி மீனாதேவ், நகராட்சி ஆணையர் காளிமுத்து, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் புனேயில் உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடந்தது.
அடுத்த கட்ட ஆலோசனையை வரும் 10ம் தேதி மேற்கொள்வது எனவும் அன்று கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது எனவும் மேலும் இந்த திட்டம் குறித்த செயல்முறை விளக்கத்தை செய்து காண்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது.   (Dinakaran)