Sunday 4 December 2011

தோவாளையில் வரலாறு காணாத விலைஉயர்வு : மல்லிகை பூ கிலோ ரூ 2000

(4.12.11) குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. பெங்களூர், ஓசூர், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் இருந்து இங்கு பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது கார்த்திகை மாதம் என்பதாலும், அதிக முகூர்த்த நாட்கள் இருப்பதாலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன.
வழக்கமாக கிலோ ரூ.250, 300 ஆக இருக்கும் மல்லிகை பூவின் விலை, கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து ரூ.500 ஆக உயர்ந்தது. நேற்று 3 மடங்கு விலை உயர்ந்து கிலோ ரூ. 1500க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று அது மேலும் அதிகரித்து கிலோ ரூ. 2000 என விற்கப்பட்டது. தோவாளை மார்க்கெட் வரலாற்றில் இது அதிகபட்ச விலையாகும்.
சபரிமலை சீசன், திருமண முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால் மல்லிகை விலை வரலாறு காணாத உயர்வை அடைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதே போல் பிச்சி பூ கிலோ ரூ.625க்கு விற்கப்பட்டது. அரளி ரூ. 60, சம்பங்கி ரூ. 100, கிரேந்தி ரூ.40, வாடாமல்லி ரூ. 40, கோழிக்கொண்டை ரூ. 40க்கு விற்பனையானது. பனிப்பொழிவு அதிகரித்தால் பூக்களின் விலை இன்னும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment