Tuesday 21 February 2012

நாளை திருநீற்று புதன் (தவக்காலம் துவக்கம்) : ஏப்.8-ல் உயிர்ப்பு பண்டிகை


கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்ப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாள் குருத்தோலை பவனிகள் நடத்தப்படுகிறது. புனித வியாழனை முன்னிட்டு இயேசு கிறிஸ்து தமது சீடர்களின் பாதங்களை கழுவிய நிகழ்வை சித்தரிக்கும் வகையில் பாதம் கழுவும் நிகழ்ச்சி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கிறது. புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இந்த ஆண்டு கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருநாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வரும் ஏப்ரல் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி 40 நாள் தவக்காலம் நாளை (22ம் தேதி) துவங்குகிறது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கின்ற திருப்பலியின்போது பங்குதந்தையர்கள் மக்களின் நெற்றியில் சாம்பல் பூசி நற்செய்தி வழங்குவர்.
தவக்காலம் தொடங்குவதற்கு அடையாளமாக இது கருதப்படும். கடந்த ஆண்டு குருத்தோலை பவனியின்போது எடுத்துச்செல்லப்பட்ட ஓலைகளை கொண்டு இந்த சாம்பல் தயார் செய்யப்படும். தவக்கால நாட்களில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை.தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படும். புனிதவாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுகிழமை குருத்தோலை ஞாயிறு திருநாள் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்பாக ஜெருசலேம் நகரின் வீதிகள் வழியாக அவரை ஒரு கழுதைகுட்டியின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
அப்போது வழிநெடுகிலும் மக்கள் ஆலிவ் மரக்கிளைகளை கைகளில் பிடித்தபடி ஓசன்னா பாடல் கள் பாடினர். இந்த நிகழ்ச் சியை நினைவுகூறும் வகை யில் கிறிஸ்தவர்கள் குருத் தோலை திருநாளை கொண்டாடுகின்றனர்.
இதனையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலைகள் வழங்கப்படும். கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி ஓசன்னா பாடல் பாடி தெருக்களில் ஊர்வலமாக வலம் வருவர். பின்னர் ஆலயங்களில் திருப்பலி, சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

No comments:

Post a Comment