Saturday 3 December 2011

முல்லைப்பெரியாறு அணை : தமிழகம் & கேரளா 5ம் தேதி பேச்சு

மத்திய அரசு ஏற்பாடு
(3.11.11) முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு மத்திய அரசின் நீர்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரளா அரசு திட்டமிட்டுள்ளது. அணைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட சிறு நிலஅதிர்வுகளை காரணம்காட்டி, அணை பலவீனம் அடைந்துவிட்டதாகவும், உடைந்தால் பேரழிவு ஏற்படும் என்று கேரள மக்களிடையே பீதி கிளப்பி வருகிறது. புதிய அணை கட்ட கோரி கேரளாவில் பல போராட்டங்களும் நடத்தப்படுகின்றன.
ஆனால், அணையை பராமரிக்கும் தமிழக அரசு அது பலமானதாக இருப்பதை ஆதாரத்துடன் விளக்கி உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் பழைய அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா வலியுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தலையிட்டு, கேரளாவின் விஷம பிரசாரத்தை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். அதேபோல், புதிய அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து, பிரச்னைக்கு தீர்வு காண தமிழகம், கேரளா ஆகிய இருமாநிலங்களின் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டும்படி மத்திய நீர்வளத்துறைக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை கேரள முதல்வர் உம்மன் சாண்டி டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் உம்மன் சாண்டி அளித்த பேட்டியில், தமிழகம், கேரளா அதிகாரிகள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை 5ம் தேதி நடைபெறும் என்று மத்திய நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.  (Dhinakaran)

No comments:

Post a Comment