Wednesday 25 January 2012

நடுக்கடலில் மூழ்கிய 4 இலங்கை மீனவர்களை உயிருடன் மீட்ட வாணியக்குடி மீனவர்கள்

குமரி மாவட்டம் குளச்சலை அடுத்த வாணியக்குடி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் தனது விசை படகில் கடந்த சில தினங்களுக்கு முன் குளச்சல் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றார். இன்று அதிகாலை குளச்சல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்த போது அங்கு ஒரு படகு கடலில் மூழ்கிக்கொண்டு இருந்தது. அதை பார்த்த ரஞ்சித் உள்பட 9 பேரும் விரைந்து சென்று அந்த படகில் இருந்த 4 பேரை மீட்டு தங்களது படகில் ஏற்றினர். அவர்களை கரைக்கு அழைத்து வருகிறார்கள்.
விசாரணையில் அவர்கள் இலங்கை கிழக்கு மாகாணம் லிந்தர்பூர் பகுதியை சேர்ந்த அபுபக்கர் அப்துல்ரகீம், முகின்பிச்சைநகீம், பசீர், முகமதுஇஸ்மாயில் என்பது தெரிய வந்தது. இவர்கள்கடந்த சில தினங்களுக்கு முன் அங்கு இருந்து மீன்பிடிக்க புறப்பட்டு வந்து உள்ளனர்.
இவர்கள் வந்த படகு கடலில் மூழ்கி விட்டது. வலையை மட்டும் மீட்டு உள்ளனர். மீனவர் கிராமம் மணப்பாட்டில் இருந்து 60 நாட்டிங்கல் தூரத்தில் இவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
11 நாட்களாக அவர்கள் நடுக்கடலில் பட்டினி கிடந்துள்ளனர். இது குறித்து கியூ பிரஞ்சி போலீசாரும் மரைன் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்த போது வாணியக்குடி மீனவ பெண்கள் கதறி அழுதபடி அவர்களை சிறைபிடிக்க முயற்சி செய்தனர். கடந்த 10 வருடங்களுக்கு முன் கன்னியாகுமரி, குளச்சல், அழிக்கால், வாணியக்குடி பகுதியை சேர்ந்த அருள்தாசன், அந்தோணி, ரஞ்சித்குமார், வில்லியம், சிபு, முத்து, பிரிட்டோ உள்பட 12 மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்ற போது மாயமானார்கள்.
இலங்கை தூதரகத்திடம் தகவல் தெரிவித்தும் பயன் இல்லை. அவர்கள் இலங்கை சிறையில் தான் இருக்கிறார்கள். எனவே இவர்களை விடக்கூடாது என்றனர். அவர்களையும் மீறி இலங்கை மீனவர்களை குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு விசாரித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment