Friday 27 January 2012

குடியரசு தின சோகம் : ‘உயிரை பறித்த சாதனை முயற்சி’

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட குடியரசு தினவிழாவில் ஜிம்னாஸ்டிக் சாகசத்தில் ஈடுபட்ட போலீஸ் கான்ஸ்டபிள் தடுமாறி விழுந்ததில் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை க்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவத்தால் ஊட்டியில் உற்சாகமாய் தொடங்கிய குடியரசு தின கொண்டாட்டம் சோகத்துடன் முடிவடைந்தது.
நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சீதோஷ்ண நிலை காரணமாக 10 மணிக்கு கொண்டாட அனுமதிக்கப்பட்டிருந்தது. போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தேசிய கொடியேற்றினார். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஊட்டி பகுதியை சேர்ந்த கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியாக 12.30க்கு நீலகிரி மாவட்ட ஆயுதப்படை காவலர் பாண்டியன்(30) நடத்தி காட்டவிருந்த ஜிம்னாஸ்டிக் சாகசங்களை காண அரங்கில் குவிந்திருந்தவர்கள் காத்திருந்தனர். ஏற்கனவே பலமுறை பாண்டியனின் ஜிம்னாஸ்டிக் சாகசங்களை பார்த்த சக போலீசார், அடுத்த சில நிமிடங்களில் அப்படி ஒரு சம்பவம் நடந்தேறும் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவரது ஒவ்வொரு சாகச நிகழ்ச்சிகளையும் பார்த்து பரவசத்துடன் கைகளை தட்டி உற்சாகமூட்டி வந்தனர்.



போலீஸ்காரர் பாண்டியன் நிகழ்த்திய கடைசி சாகசங்கள்
இறுதியாக 13 பேரை படுக்க வைத்து தாண்டும் ஜிம்னாஸ்டிக் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டார். தாண்டி கீழே விழும்போது உடம்பில் அடி படாமல் இருப்பதற்கு மெத்தை விரிக்கப்பட்டிருந்தது. கடைசியாக 13 பேரை தாண்டி அந்தரத்தில் பறந்தபோது மைதானமே எழுந்து நின்று ஆர்ப்பரித்தது. ஆனால் பாண்டியன் பாய்ந்து சென்று தாண்டி கரணம் அடித்தபோது மெத்தையை ஒட்டி படுத்திருந்த போலீஸ் மீது இவரது கைகள் பட்டது. மெத்தை ரலேசாக விலகியதில் இவரது கழுத்து தரையில் பட்டு மடங்கி "அம்மா" என்று சத்தம் போட்டவாறே சாய்ந்தார். இதை பார்த்த சக போலீசார் அருகில் சென்று விசாரித்தபோது "கழுத்தில் அடிபட்டுருச்சு...உயிரு போகுது..." என்று மட்டும் கூறியுள்ளார். அடுத்த சில நொடிகளில் கண்கள் சொருகி மயக்க நிலைக்கு செல்ல போலீசார் திகைத்தனர். சாகசத்தை பார்த்த பரவசத்தில் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அரங்கம் அடுத்த சில நிமிடங்களிலேயே சோகத்தில் ஆழ்ந்தது.
ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பாண்டியனை அழைத்து சென்ற ஆம்புலன்சுடன் நீலகிரி எஸ்பி நிஜாமுதீன் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றனர். பாண்டியன் உயிரை காக்க தக்க சிகிச்சையளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்து எலும்பு முறிந்து மூளைக்கு செல்லும் ரத்தநாளமும் பாதித்து வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்ட போலீசார் கதறி துடித்தனர்.
ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பாண்டியனை அழைத்து சென்ற ஆம்புலன்சுடன் நீலகிரி எஸ்பி நிஜாமுதீன் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றனர். பாண்டியன் உயிரை காக்க தக்க சிகிச்சையளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்து எலும்பு முறிந்து மூளைக்கு செல்லும் ரத்தநாளமும் பாதித்து வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்ட போலீசார் கதறி துடித்தனர்.
உயிரிழந்த பாண்டியன் தேனி மாவட்டத்தை சேர்ந்த சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு சத்தியா என்ற மனைவியும், சுஜித் என்கிற 4 வயது ஆண் குழந்தை மற்றும் ஸ்ரீவர்சினி என்கிற 11 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இவர் நன்கு இறகு பந்து விளையாட கூடியவர்.  
கடந்த 2003ல் போலீசில் சேர்ந்தார். முதலில் சத்தியமங்கலம் அதிரடிப்படையில் பணியாற்றினார். பின்னர் நீலகிரி மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். மாவட்ட நில அபகரிப்பு வழக்கு விசாரணை பிரிவில் டிரைவராக பணியாற்றி வந்தார். குடியரசு தினவிழாவில் சாகசம் செய்து உயிரிழந்த பாண்டியனின் உடலுக்கு கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், எஸ்.பி. நிஜாமுதீன் உட்பட உயரதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது சொந்த ஊரான சின்னமனூருக்கு எடுத்து செல்லப்பட்டது.  (Dinakaran)

No comments:

Post a Comment