Thursday 26 April 2012

பரத்பூர் கலெக்டர் அதிரடி : திருமண பத்திரிகையில் பிறந்த தேதி கட்டாயம்

குழந்தை திருமணத்தை தடுக்க, திருமண பத்திரிகைகளில் கட்டாயமாக மணமகன், மணமகள் பிறந்த தேதிகளை அச்சடிக்க வேண்டும் என பரத்பூர் கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனால் குழந்தை திருமணம் செய்வது குறைந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரத்பூர் மாவட்ட கலெக்டர் கவுரவ் கோயல். இவர், குழந்தை திருமணம் செய்வதை தடுக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சகங்களுக்கும் அதிரடி உத்தரவை கடந்த மாதம் பிறப்பித்தார். அதாவது, திருமண பத்திரிக்கை அச்சடிக்கும் போது மணமகள், மணமகனின் வயதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், அம்மாநிலத்தில் நேற்று "அகதீஜ்" எனும் முக்கிய விழா கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய அம்சமாக குழந்தை திருமணமும் அதிகம் நடக்கும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கவுரவ் கோயல் கூறியதாவது:

குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் கடந்த மாதம் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்துக்கு நிறைய வரவேற்பு கிடைத்துள்ளது. பெற்றோர்களிடம் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. அகதீஜ் விழாவில் பெரும்பாலும் நடத்தப்படும் குழந்தை திருமணம், இந்த ஆண்டு தடுக்கப்பட்டுள்ளது.

இளம் தலைமுறையினர் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். திருமண பத்திரிகை அச்சடிக்க வேண்டுமானால் மணமகள், மணமகனின் வயதுக்கான அத்தாட்சியும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் இந்த மாற்றத்தை கொண்டு வரமுடிந்தது. இவ்வாறு கவுரவ் கோயல் கூறினார்.

No comments:

Post a Comment