Thursday 26 April 2012

இறக்கும் மீனவர் பிள்ளைகளின் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் மற்றும் பல : சட்டசபையில் அமைச்சர் ஜெயபால் பேசியது

மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயபால் சட்டசபையில் நேற்று பேசியதாவது:  
** கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது காணாமல் போகும் அல்லது இறக்க நேரிடும் மீனவர்களின் குடும்பத்துக்கு தின உதவித் தொகையாக வழங்கப்பட்டு வரும் ரூ 50 ஐ ரூ 250 ஆக உயர்த்தி வழங்கப்படும். காணாமல் போகும் அல்லது இறக்க நேரிடுபவர்களின் பிள்ளைகள் தொடர்ந்து தொழில்நுட்ப கல்வி பயில, அரசால் நிர்ணயிக்கப்படும் கல்வி கட்டணத்தை முழுமையாக ஏற்று உயர்கல்வி வழங்கிடும் வகையில் ஒரு நிதி அமைப்பை அரசு உருவாக்கும்.
** தூத்துக்குடி, திருவெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இயக்கப்படும் இயந்திர படகு உரிமையாளர்களுக்கு, வணிகரீதியிலான விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட மானியத்துடன் கூடிய மண்ணெண்ணை ஒரு லிட்டர் ரூ 25 வீதம் படகு ஒன்றுக்கு மாதந்தோறும் 200 லிட்டர் வழங்கப்படுகிறது. இனிமேல் 250 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். இது தவிர கூடுதலாக மண்ணெண்ணை தேவைப்படும் மீனவர்களுக்கு சந்தை விலையில் 100 லிட்டர் வரை வழங்கப்படும்.
** மீனவர்கள், மீன்வளர்ப்போர், மீனவ மகளிருக்கு தேவைப்படும் மீன்வளம் மற்றும் இதர திறனை உயர்த்த பயிற்சி அளிக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மீன்வளத் தொழில் நுட்ப நிலையம் ரூ 34  கோடி செலவில் அமைக்கப்படும். இதற்காக முதல்கட்டமாக ரூ 7 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
** தேசிய மீன் வள மேம்பாட்டு வாரியத்தின் நிதி உதவியுடன் ஒரு கோடி செலவில் 10 நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும்.
** தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரிப்புறக்கரை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வாணியஞ்சாவடி ஆகிய அரசு மாதிரி உவர்நீர் மீன் பண்ணைகளை குறிப்பிட்ட நோய்க்கிருமிகள் இல்லாத வெள்ளை இறால் "வெனாமி" வளர்ப்பதற்கு உகந்த வகையில் தரம் உயர்த்திடவும், உயிரி பாதுகாப்பு வசதிகள் மற்றும் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.1 கோடியே 40 லட்சத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
** மீன் உணவின் அத்தியாவசியத்தினையும், வண்ண மீன் வளர்ப்பின் பயன் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, சென்னையில் தேசிய அளவி லான வண்ணமீன் கண்காட்சி மற்றும் கடல் உணவு விழா நடத்தப்படும்.
மீனவர் நலத் திட்டங்களைத் திறனுடன் நிர்வகித்திடும் வகையில், மீன்வளத்துறையின் நிர்வாக அமைப்பு சீரமைக்கப்படும்.

No comments:

Post a Comment