Monday 16 April 2012

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் துவங்கியது

tamil-nadu-fishing-halt-for-1.5monthsதமிழகத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான 13 கடலோர மாவட்டங்களில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இனப்பெருக்க காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் மே 29ம் தேதி வரை, விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் நேற்று துவங்கியது. 

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் கோவளம் வரையிலான கிழக்கு கடல் பகுதியில் 45 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலில் இருக்கும் என மீன்துறை தெரிவித்துள்ளது. கோவளம் முதல் நீரோடி வரையிலான மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு ஜூன் 15ம் தேதி முதல் ஜூலை மாதம் 29ம் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

மீன்பிடி தடை காலம் எதிரொலியாக குமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வள்ளங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் படகுகளை பழுது பார்த்தல், வலைகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை துவக்கியுள்ளனர். மீன்பிடி தடை காலம் துவங்கியுள்ளதால் மார்க்கெட்களில் மீன்களின் வரத்து குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களில் பெரும்பாலானோர் கேரளத்தின் கொல்லம், கொச்சி, சாவக்காடு போன்ற இடங்களிலும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் விலக்கப்படும் போது கேரளத்தில் மீன்பிடி தடை காலம் அமுல் படுத்தப்படும் என்பது குறிப்பிடதக்கது .

No comments:

Post a Comment