Thursday 12 January 2012

1,000 பள்ளிகளுக்கு நோட்டீஸ் : நிர்ணயிக்கப்பட்டகுறைந்தபட்ச இடவசதி

மாநிலம் முழுவதும் குறைந்தபட்ச இடவசதி இல்லாத 1,000 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளை தொடங்கி நடத்த அரசு குறைந்தபட்ச நில அளவை நிர்ணயித்து உள்ளது. மாநகராட்சி பகுதியில் 33 சென்ட், நகராட்சி பகுதியில் 1 ஏக்கர், பேரூராட்சி பகுதியில் 2 ஏக்கர், ஊராட்சி பகுதியில் 3 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதியில் 33 சென்ட் நிலம் விளையாட்டு மைதானத்துடன் சேர்ந்து ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.
வகுப்பறைகள் ஒரு இடத்திலும், விளையாட்டு மைதானம் வேறு இடத்திலும் இருக்க கூடாது. வேறு இடத்தில் விளையாட்டு மைதானம் இருந்தால் அது குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் குறைந்தபட்ச நிலஅளவு இல்லாத சுமார் 1,000 பள்ளிகளுக்கு சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பள்ளிகள் விளக்கம் அளிக்க 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க தலைவர் ஆர்.விசாலாட்சி கூறியதாவது:
அரசு அனுமதி பெற்று செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு தற்போது குறைந்தபட்ச இடவசதி இல்லை என்ற காரணத்தை கூறி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த அறிவிப்பு பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினரிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச நிலத்தை வாங்க பள்ளிகளுக்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகளை சுற்றி இடமே இல்லாத நிலையில், குறைந்தபட்ச அளவு நில விதிமுறையை எப்படி நிறைவேற்ற முடியும்? காலநீட்டிப்பு செய்தாலும் ஒரே இடத்தில் இடம் வாங்க இயலாத நிலைதான் உள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வாக பள்ளியின் நிலம் ஒரே இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு அனுமதி அளிக்க வேண்டும். இடவசதிக்கு ஏற்ப மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்கள் நலன் கருதி குறைந்தபட்ச நில அளவையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு விசாலாட்சி கூறினார்.

No comments:

Post a Comment