Tuesday 10 January 2012

7 ஆண்டுகள் கடந்தும் நிரந்தர பாலம் இல்லை : மணக்குடி பாலப்பணி எப்போது முடியும்?

மணக்குடியில் 7 ஆண்டுகளுக்கு முன், சுனாமியால் சேதமடைந்த பாலத்துக்கு பதிலாக இன்னும் புதிய பாலம் முழுமையாக கட்டப்படாததால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது நடந்து வரும், மணக்குடி நிரந்தர பாலத்தின் வேலைகளை வேகமாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் அடுத்த கீழமணக்குடி, மேலமணக்குடி ஆகிய இரு கிராமங்களையும் இணைக்கும் வகையில், பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக் கையை ஏற்று, கடந்த 1999ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் ரூ 8.47 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையில் பாலம் 2 ஆக உடைந்தது.

இதனால் இரு கிராமங்களை சேர்ந்தவர்களும் மீண்டும் சுமார் 20 கி.மீ. தூரம் சுற்றி வர வேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்ததால், இதன் பலன் முழுமையாக கிடைக்கவில்லை. எனவே மீண்டும் நிரந்தர பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன் பேரில் கடந்த திமுக ஆட்சியின் போது, புதிய பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாலம் கட்டுமான பணிகளுக்கான நில ஆர்ஜிதமும் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. உலக வங்கி நிதியுதவியுடன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ 21.30 கோடி மதிப்பில் மேலமணக்குடி & கீழமணக்குடி பாலம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டு முழுவீச்சில் தொடங்கி நடந்தன. இப்பாலத்திற்கு சுமார் 560 மீ நீளத்திற்கு மேலமணக்குடி மற்றும் கீழமணக்குடி கிராமங்களில் அணுகு சாலைகளும் அமைக்கப்பட உள்ளன.
பணிகள் தொடங்கி சுமார் 2 வருடத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலை யில் பாலம் இன்னும் முழுமை அடைய வில்லை. ஆகஸ்ட் 2011 -க்குள் பணி களை முடிக்க வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்னும் 55 சத வீதம் பணிகள் பாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பால பணிகள் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும் என்று அவர் கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
இது குறி த்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது :
மணக்குடி பாலத்தின் கீழ் தள பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் முடிவடைந்தன. இன்னும் இணைப்பு பகுதிகளுக்கான வேலைகள் தொடங்கப்பட வேண்டி இருக்கிறது. இந்த பணிகளும் விரைவில் தொடங்கும். இதே போல் பாலத்தின் மேல்புற பகுதிக்கான வேலைகளும் தொடங்க இருக்கின்றன. பணிகள் தரமானதாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்துக்கு பணிகள் மாற்றப்பட்டன. இதனால் இடையில் 2 மாதங்கள் பணிகள் தாமதம் ஆகின. தற்போது பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இன்னும் 2, 3 மாதங்களில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி விடும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment