Monday 30 January 2012

எச்ஐவி பாதித்தவர்கள் பட்டியல்

விழிப்புணர்வால் எய்ட்ஸ் பாதிப்பு குறைந்தது
வேலூரில் கடந்த ஆண்டு 1487 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டுகளைவிட தற்போது எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க நிர்வாகிகள் வேலூரில் கூறியதாவது;
எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. உலகில் 3.34 கோடிக்கும் அதிகமானவர்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் ஆண்டு தோறும் 20 லட்சம் பேர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. தமிழகத்தில் எச்ஐவி அதிகம் பரவும் மாவட்டங்களில் வேலூரும் ஒன்று. 2002ம் ஆண்டு முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிஎம்சி மருத்துவமனையில் எச்ஐவி பரிசோதனை மையம் அமைக்கப்பட்டன. தொடர்ந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 38 இடங்களில் ஒருங்கிணைந்த பரிசோதனை மையங்கள் (ஐசிடிசி) துவக்கப்பட்டன. 
இங்கு கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி பரிசோதனை மேற்கொள்ளப்படு கிறது. மேலும் விருப்பமுள்ளவர்கள் இந்த ஐசிடிசி மையங்களில் பரிசோதனை மேற்கொள்ளலாம். பரிசோதனை முடிவு ரகசியமாக வைக்கப்படுகிறது. மாவட்டத்தில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் கூட்டு மருந்து சிகிச்சை (ஏஆர்டி) மையங்கள் உள்ளன. இங்கு எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை மற்றும் கவுன்சலிங் அளிக்கப்படுகிறது. 2002-ம் ஆண்டில் 1991 பேருக்கு பரிசோதிக்கப்பட்டதில் 110 பேருக்கு எச்ஐவி இருப்பது தெரியவந்தது. 2007-ம் ஆண்டில் அதிகப்பட்சமாக 2380 பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருந்துள்ளது. அதன்பிறகு படிப்படியாக எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேலூர் மாவட்டத்தில் குறைந்து வருகிறது. 
கடந்த 2011-ம் ஆண்டில் 1,487 பேருக்கும் எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

No comments:

Post a Comment