Monday 9 January 2012

வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு ஓய்வூதியம் : மன்மோகன் சிங்

வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்திய தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
வெளிநாட்டு இந்தியர்களின் 10வது மாநாடு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இதில், 60 வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் 1,900 பேர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பேசியதாவது:
வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்கள், தங்களுக்கு அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது கோரிக்கை ஏற்று, ஓய்வூதியம் மற்றும் இன்சூரன்ஸ் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் 50 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளை சேர்ந்த இந்திய தொழிலாளர்களிடையே தங்கள் வருங்காலத்துக்காக சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சந்தாதாரர் சார்பிலும் அரசு ஆண்டுக்கு ரூ 1000 செலுத்தும். அதே நேரத்தில், சந்தாதாரர்கள் ஒவ்வொருவரும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். பெண்களுக்கு அரசு தனது பங்காக ரூ 2 ஆயிரம் செலுத்தும்.
வளைகுடா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுகிறது. குறிப்பாக எகிப்து, லிபியாவில் புரட்சி ஏற்பட்டுள்ளது. லிபியாவில் சிக்கிக் கொண்ட 16 ஆயிரம் இந்தியர்களை அவசரமாக வெளியேற்றும் பணியை இந்தியா மேற்கொண்டது. இதுபோன்ற அபாய காலங்களில் உதவ இந்தியா தயாராக இருக்கிறது. இதுபோன்ற காலங்களில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

No comments:

Post a Comment