Tuesday 14 February 2012

ரேபீஸ் நோய் : இந்தியாவில் ஆண்டுக்கு 20,000 பேர் பலி : குழந்தைகள் அதிகம்

இந்தியாவில், நாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸ் நோய்க்கு ஆண்டு தோறும் 20 ஆயிரம் பேர் பலியாவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
செல்லப் பிராணியான நாய்கள் கடிப்பதன் மூலம் ரேபீஸ் நோய் ஏற்படுகிறது. வீட்டு நாய், தெரு நாய் என எது கடித்தாலும், ரேபீஸ் நோய் நிச்சயம் பரவும் என்கின்றனர் அரசு டாக்டர்கள். ‘ரேத்தோ’ என்ற வைரஸ் கிருமியால் பரவும் இந்நோய் நாய்களின் உமிழ்நீர் மூலமாக மனித உடலுக்குள் ஊடுருவுகிறது.
நாய் கடித்தால், கடிப்பட்ட இடத்தை சோப்பு நீரால் கழுவி ஓரு மணி நேரத்துக்குள் ஏ.ஆர்.வி., (ஆன்டி ரேபிக் வைரஸ்) தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் 5 தடுப்பூசி போட்டுக் கொள்வதன்மூலம் ரேபீஸ் வருவதை முழுமையாக தடுக்கலாம்.
மரணத்தை விளைவிக்கும் இந்நோய்க்கு இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேரும், உலகத்தில் 55 ஆயிரம் பேரும் பலியாவதாக இந்திய பொது சுகாதாரச் சங்கத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
இது குறித்து இச்சங்கத்தின் தமிழ்நாடு கிளைத் தலைவர் டாக்டர் இளங்கோ கூறுகையில், ‘‘உலகளவில் 150 நாடுகளில் ரேபீஸ் நோயால் பலியாவோர் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக, 95 சதவீத ரேபீஸால் ஏற்படும் மரணங்கள் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில்தான் அதிகமாக நடக்கிறது. 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 40 சதவீதம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் கிராமப்புற மக்கள் நாய்க்கடியால் பெருமளவு பாதிக்கின்றனர்.
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தினமும் சராசரியாக 150 பேர் நாய்க்கடிக்கு ஏ.ஆர்.வி., தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.
நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகள் அதிகளவில் ரேபீஸால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது,’’ என்கிறார்.
மரணம் நிச்சயம்
வெறிநாயால் கடிபட்டவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் நாய் கடித்த 3 முதல் 6 மாதத்துக்குள் ரேபீஸ் நோய் பாதிப்பு ஏற்படும்.
உடல்வலி, காய்ச்சல், நிலை தடுமாறுதல், தண்ணீர், வெளிச்சம், பேன் சுற்றல் ஆகியவற்றைக் கண்டால் அச்சம், உமிழ்நீர் சுரப்பு அதிகரித்தல், மூச்சிறைப்பு ஆகியவை ரேபீஸ் தாக்கத்தின் அறிகுறிகள். இந்த பாதிப்பு உள்ளவர் ஒருகட்டத்தில், நாய் போலவே குரைக்க ஆரம்பிப்பார். அதுதான் உச்சநிலை. அந்தநிலை ஏற்பட்ட 1 மணி நேரத்துக்குள் அவர் நிச்சயம் இறந்து விடுவார் என்கிறது மருத்துவத் துறை. ரேபீஸ் நோயால் இறந்தவரின் உடலை எரித்து விட வேண்டும்.

No comments:

Post a Comment