Friday 3 February 2012

ஒழுகினசேரி : அதிரசத்திற்குள் பல்லி : டீக்கடைக்கு சீல்

இருளப்புரத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் நேற்று மாலை தனது உறவினர்கள் சிலருடன் நாகர்கோவில் ஒழுகினசேரி ஆராட்டு ரோடு பகுதியில் உள்ள டீக் கடையில் டீ குடித்து விட்டு அதிரசம் வாங்கி தின்றுள்ளனர். மேலும் வீட்டில் உள்ள தனது குழந்தைகளுக்கும் அதிரசம் வாங்கி சென்றுள்ளார்.
வீட்டில் அவரது குழந்தை அதிரசத்தை கடிக்க முடியாமல் திணறியுள்ளது. இதனையடுத்து பால்ராஜ் அதிரசத்தை வாங்கி பிய்த்துள்ளார். அப்போது அதிரசத்திற்குள் எண்ணையில் பொறிந்த நிலையில் பல்லி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தை சேர்ந்த ஸ்ரீராமிடம் புகார் செய்தார். அவர் உடனடியாக நகராட்சி நகர்நல அலுவலர் தாணுபிள்ளையிடம் நேரில் சென்று புகார் செய்தார்.
இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் சம்மந்தப்பட்ட டீக்கடைக்கு சென்று விசாரித்தனர். அப்போது பால்ராஜிக்கு அதிரசத்தை விற்றதை ஒப்புக்கொண்டார். ஆனால் அதிரசம் தன்னால் தயாரிக்கப்பட்டது அல்ல. கோட்டார் பகுதியை சேர்ந்த பலகார மொத்த தயாரிப்பாளரிடமிருந்து வாங்கி விற்பனை செய்துள்ளதாக கூறினார். எனினும் நகராட்சி அதிகாரிகள் கடையில் இருந்த அனைத்து தின்பண்டங்களையும் பறிமுதல் செய்து சாக்கடையில் கொட்டி அழித்தனர். மேலும் கடையில் வெள்ளை அடித்து சுத்தம் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு அனுமதித்த பின்னரே கடையை திறக்க வேண்டும் எனவும் அறிவிறுத்தினர்.
இதற்கிடைய இன்று கிருஷ்ணன்கோயில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் ஸ்ரீராம் இதுபற்றி புகார் செய்துள்ளார். மேலும் நாகர்கோவில் பகுதி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் திறந்த நிலையில் தின்பண்டங்களை விற்பனை செய்வதை தடுப்பதுடன், தின்பண்ட மொத்த தயாரிப்பு கூடங்களில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment