Monday 2 April 2012

விலை வாசி



"தோசை எவ்ளோ?"

"இன்னா தோசை? நெறைய வெரைட்டி இருக்கு."

"ரவா தோசை?"

"தாங்கமாட்ட. 45 ருபாய் . நீ எவ்ளோ வச்சிருக்க?." என் மூஞ்சியே அவர்கிட்ட பேசுது போல!!

"15 ருபாய், இதுக்கு இட்லி கெடைக்குமா இதுக்கு?"

"கொஞ்சம் இரு. டேக்ஸ் இருக்கான்னு பாத்துட்டு வர்றேன்."

எதிலிருந்தவர் என்னை மேலும் கீழுமாய்ப் பார்த்ததற்காக, அவரை நான் லெஃப்டு-ரைட்டுமாய்ப் பார்த்தேன். வேற வழி?! 15க்கு இவ்வளவுதான் பார்க்கமுடியும்!

சர்வர் வந்தார்.

"15 ருபாய் + வரி (Tax) .  இட்லி குடுக்க முடியாது."

"சரி.  காப்பி?"

"காப்பி 18 ருபாய் + வரி (Tax) ஸ் சார்."

"இந்த ஹோட்டல்ல 15க்கு என்னதான் கெடைக்கும்?"

"ஒரு எழவும் கெடைக்காது!"

"சாரி" என்று சொலி எழுந்தபோது, சைகையால் உட்காரச்சொன்னார்.

இரண்டே நிமிட இடைவெளியில் திரும்ப வந்தார்.

"டக்குன்னு எழுந்து போய்ருங்க. இல்லைன்னா நான் மாட்டிக்குவேன்." ஒரு சிறு பார்சலை கையில் திணித்தார்.

நானும் பதறிப்போய் அதை வாங்கிக்கொண்டு, வெளியில் வந்து, பிரித்துப் பார்த்தேன்.

கொஞ்சம் கெட்டிச் சட்டினியும் அதற்குள்ளே 50 ரூபாய் பணமும் இருந்தது.

'என்னால் இவ்வளவுதான் முடியும்' என்று ஒரு துண்டுச் சீட்டும் இருந்தது!!

No comments:

Post a Comment