Thursday 15 December 2011

விரட்டப்பட்ட கேரள தமிழர்கள் எல்லையில் குவிவதால் பதற்றம் :

தேவாரத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு
கேரளா வில் தமிழர்களுக்கு சொந்தமான ஏலத்தோட்டங்களை வெட்டி அழிப்பதில் மலையாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா மாநிலம், உடுப்பஞ்சோலை, பாறைத்தோடு, மணத்தோடு, சதுரங்கப்பாறை உள்ளிட்ட இடங்களில் அதிகமான ஏக்கர் பரப்பில் ஏலத்தோட்டங்கள் உள்ளன. இதனை கடந்த இரண்டு தினங்களாக மலையாளிகள் சேதப்படுத்தி வருகின்றனர். இரவுநேரங்களில் புகுந்துவிடும் கும்பல் இங்குள்ள ஏலச்செடிகளை பறித்து எறிகின்றனர்.
தேவாரம் சதுரங்கப்பாறை அருகே தமிழருக்கு சொந்தமான காற்றாலை மின்சாரம் நான்கை சேதப்படுத்தி உள்ளனர். மேலும் கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு கடைகளில் பொருட்களை வழங்கக்கூடாது. பஸ்களில் ஏற்றக்கூடாது என வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் கேரள டாக்டர்கள் மறுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே தமிழர்களை ஓட, ஓட விரட்டிஅடித்து வருகின்றனர்.
மேலும் பெண்களை மனிதாபிமானமின்றி நடத்தி வருகின்றனர். கேரள மாநில போலீசாரும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் அக்கறை காட்ட மறுத்துள்ளனர். இதனால் இடுக்கி மாவட்டத்தில் இருந்து ஆயிரம் குடும்பங்கள் வரை சாரை, சாரையாக சாக்கலூத்து மெட்டு, போடி மெட்டு வழியாக நடைபயணமாக வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் தேவாரம், கோம்பை, போடி பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. நேற்று போராட்டம் சற்று தணிந்திருந்த நிலையில், விரட்டி அடிக்கப்பட்ட தமிழர்கள் வந்து குவிவதால், தமிழக&கேரள எல்லைப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை குமுளி எல்லைப்பகுதியில் குவிந்திருந்த போலீசார், தற்போது போடி, தேவாரம், கோம்பை பகுதிக்கு விரைந்துள்ளனர். பதற்றத்தை தணிக்கும் வகையில் திண்டுக்கல் டிஐஜி சஞ்சய்மாத்தூர் தலைமையில் 500 போலீசார் தேவாரம் பகுதியில் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். இதற்கிடையில் கோம்பையில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தேனி கலெக்டர் பேச்சு:
தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பை அளித்திட நடவடிக்கை எடுக்குமாறு தேனிமாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி, இடுக்கி மாவட்ட கலெக்டருடன் பேசினார். இதுகுறித்து தேனி கலெக்டர் பழனிச்சாமி கூறுகையில், �இடுக்கி மாவட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் தமிழர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தமாவட்டத்தில் எந்த நிலைமை என்பதை உடனடியாக இடுக்கி மாவட்ட கலெக்டருடன் பேசி உள்ளேன். அங்கு போதிய பாதுகாப்பு அளிக்குமாறு வேண்டியுள்ளேன். இங்கு வருபவர்களை அழைத்துச்செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு தமிழர்களின் சொத்துக்களை பாதுகாத்திட போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தி உள்ளேன். வீடுகள் இல்லாதவர்களை தங்க வைத்திட தேவாரம் பகுதியில் சம்பந்தப்பட்ட தாசில்தார்களை அழைத்து தேவையான வசதிகள் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்� என்றார்.
குழந்தையுடன் வந்த பெண்:
சதுரங்கப்பாறை மலைப்பாதை வழியே தமிழகத்தை சேர்ந்த பெண், 3 மாத கைக்குழந்தையுடன் கேரளாவில் இருந்து தேவாரம் வந்தார். அங்கு தமிழர் குடும்பங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தமிழர்கள் தாக்கப்படுவதாகவும், தமிழகத்தில் தனக்கு வீடு கிடையாது. நான் எங்கு செல்வது என்று தெரியவில்லை என்று கூறி கதறி அழுதார்.

No comments:

Post a Comment