Wednesday 14 December 2011

வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் முப்பருவ தேர்வு (ட்ரைமஸ்டர்) முறை : கல்லூரிகளில் செமஸ்டர் போல

அரசு பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 வகுப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டு முதல் முப்பருவ தேர்வு (ட்ரைமஸ்டர்) முறை நடைமுறைக்கு வருகிறது.
இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் ஏற்கெனவே மாநில பாடத்திட்டம், மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் முறையில் கல்வி கற்பிக்கும் முறை இருந்தது. இதனால் மாணவர்கள் இடையே பாகுபாடு ஏற்படுகிறது என்று பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர். அந்த கருத்தை ஏற்று கடந்த முறை ஆட்சியில்இருந்த திமுக அரசு சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்தது.
சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்களை முழுக் கல்வி ஆண்டும் படிக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால், முழுக் கல்வியாண்டுக்குரிய பாடப் புத்தகங்களை 3 பருவங்களாக பிரித்து படிக்கும் வகையில் முப்பருவ தேர்வு முறையை அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: வரும் கல்வி ஆண்டு (2012 & 2013) முதல் இந்த முப்பருவ தேர்வு முறை 1 முதல் 8ம் வகுப்புவரை நடைமுறைக்கு வருகிறது. பள்ளிக் குழந்தைகளின் புத்தகச் சுமையை குறைத்து, அவர்களின் உடல் ரீதியான குறைபாடுகளை தவிர்க்கவும் இந்த முறை கொண்டு வரப்படுகிறது.
மேலும், முழுக் கல்வி ஆண்டுக்குரிய பாடப்புத்தகங்கள் 3 பருவங்களுக்கு ஏற்ப பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பருவ முடிவிலும், தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டு முறையுடன் கூடிய தேர்வு நடத்தப்படும். இதனால், மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை குறைக்கப்படும்.
மேலும், ஆண்டு இறுதியில் பாடங்கள் மற்றும் மாணவர்களின் தனித்திறன்கள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இதற்காக, தொடர் மதிப்பீட்டு முறைகள் (சிசிஇ) கொண்டு வரப்படுகிறது. 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டும், 9 மற்றும் 10ம வகுப்புகளுக்கு 2013 & 2014ம் கல்வி ஆண்டிலும் கொண்டு வரப்படும்.
முதல் பருவம் என்பது ஜூன் முதல் செப்டம்பர் வரையும், இரண்டாம் பருவம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையும், மூன்றாம் பருவம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையும் இருக்கும். இதற்கேற்ப பாடப்புத்தகங்கள் 3 பாகமாக பிரிக்கப்படுகிறது.
முப்பருவ தேர்வு முறையில் பாடங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளதால் கற்கும் மாணவர்களின் முழுத் திறனும் வெளிப்படும். மாணவர்களின் சிந்தனைத் திறன் மேம்படும். கலந்துரையாடும் தன்மை, எளிதில் கற்கும் தன்மை, போன்றவற்றை மாணவர்கள் பெறுவார்கள்.
ஆசிரியர்களுக்கும் அதிக பாடங்களை நடத்த வேண்டிய சிரமம் குறைகிறது. மேலும், பருவ முறை பாடத்துடன் மாணவர்களின் தனித்திறன்களும் தொடர் மதிப்பீட்டு முறையில் கொண்டு வரப்படுவதால், தரமான கல்வியை வழங்க முடியும்.
இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment