Friday 20 January 2012

ஏப்ரல் முதல் பி.எப் ரிட்டன்ஸ் இ பைலிங் முறை

பி.எப் ரிட்டன்ஸ்களை இ பைலிங் முறையில் தாக்கல் செய்வதை ஏப்ரல் முதல் கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள் தற்போது தங்களது தொழிலாளர்கள் கணக்கு மற்றும் இதர வரவு செலவுகளை நேரிலோ அல்லது தபாலிலோ வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு அனுப்பி வருகிறது. இதனால் சில நேரங்களில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் பி.எப்.பில் ஆன்லைன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி முதல்கட்டமாக வங்கி நடவடிக்கைகள் ஆன்லைனில் நடைமுறைப் படுத்தப்பட்டது. தற்போது தொழில் நிறுவனங்கள் பி.எப் ரிட்டன்ஸ்களை முற்றிலும் இ பைலிங் முறையில் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவன உரிமையாளர்கள் அல்லது அந்த நிறுவனம் சார்பில் பி.எப் பணிகளை கவனிக்கும் பிரதிநிதிக்கு இ பைலிங் செய்யும் முறைபற்றி பி.எப் அதிகாரிகள் சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர்.
ஒருவேளை கம்ப்யூட்டர் இல்லாத நிறுவனமாக இருந்தால் அவர்கள் கம்ப்யூட்டர் வசதி மற்றும் கம்ப்யூட்டர் இயக்க தெரிந்தவர்களை பணியில் சேர்த்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சோதனை முறையில் இபைலிங் மூலம் ரிட்டன்ஸ் தாக்கல் செய்யலாம். ஏப்ரல் முதல் கண்டிப்பாக இபைலிங் முறை பின்பற்றப்பட உள்ளது. இதுபற்றி நாகர்கோவில் பி.எப் உதவி ஆணையர் சோமன் கூறியதாவது:
தொழிலாளர்கள் நலன் கருதி பி.எப் சேவையில் குறைபாடுகளை களையவும் பணப்பலன்கள் உடனுக்குடன் கிடைக்கவும் பி.எப் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இபைலிங் முறையில் ரிட்டன்ஸ் தாக்கல் கட்டாயம் என்பதால் அனைத்து நடவடிக்கைகளும் கம்ப்யூட்டர் மூலம் நடைபெறும். இதனால் காலதாமதம், தேவையற்ற அலைக்கழிப்பு போன்றவை அறவே தவிர்க்கப்படும் என்றார்.
நாகர்கோவிலில் 28-ம் தேதி பயிற்சி
குமரியில் 1,800 தொழில் நிறுவனங்களில் 1.50 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் மேற்கு மாவட்டத்தில் முந்திரி தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. இந்த தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு இபைலிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக தோவாளை, அகஸ்தீஸ்வரம் தாலுகாக்களில் உள்ள 300 பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த உரிமையாளர் அல்லது பிரதிநிதிகளுக்கு வருகிற 28ம் தேதி நாகர்கோவில் ஹோட்டல் கேனனில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 2 பிரிவுகளாக இந்த பயிற்சி நடைபெறும். மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும் என உதவி ஆணையர் சோமன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment